பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

65


உயிர் துறத்தலையே தங்களுக்குரிய சிறப்பாக மதித்தார்கள். அரசர் போர்க்களத்தில் சாவாமல் நோயினால் முதிர்ந்து இறந்தனராயினும், அவர் உடம்பினை வாளாற் பிளந்து பின்னரே அடக்கம் செய்வது வழக்கம். இதனால் தமிழர்கள் போர்த்துறையிற் கொண்ட பெருவிருப்பமும் அவர்களுடைய மறவுணர்ச்சியும் நன்கு புலனாதல் காணலாம்.

சங்ககாலத் தமிழர் அறிவு, ஆண்மை, பொருள், படை என்னும் நான்கு திறத்திலும் வன்மை பெற்றிருந்தனர்; தமது கல்வித்திறத்தால் அறிவை வளர்த்தனர்; படைத்திறத்தால் ஆண்மை பெற்றனர்; உழவு வாணிகம் முதலிய தொழில்களாற் பொருள் பெறும் வழி துறைகளைப் பெருக்கினர்; அறிவும் ஆண்மையும் உடையாரைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் துணைபெற்று நாட்டினைக் காத்து, அரசியலை வளர்த்தனர்; நண்பின் திறத்தால் உலகினர் எல்லாரையும் தம் சுற்றமாகக் கருதி, அன்பினை வளர்த்தனர்; அறனாற்றி மூத்த அறிவுடையராய், இறைவனை வழிபட்டு, எல்லார்க்கும் நல்லனவே செய்து மகிழ்ந்தனர்.