பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“முறுக்கெல்லாம் உங்களுக்குத்தான். பாட்டியை அந்தப் பலகாரம் பண்ணிக்கொடு, இந்தப் பலகாரம் பண்ணிக்கொடு என்று நீங்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அதற்காகத் தான் நானே நிறையச் செய்து வைத்திருக்கிறேன்” என்று பேச்சை முடிக்கு முன்னால் வெளியில் கார் சத்தம் கேட்டது.

“மாமா, வந்துவிட்டார். உடனே புறப்பட வேண்டியதுதான்” என்றான் சுந்தரம்.

மூவரும் படுக்கை பெட்டி முதலிய சாமான்களைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஜின்கா பலகார டப்பாவை தூக்கிக் கொண்டு ஓடிற்று. தங்கமணி ஜின்காவை விட்டுப் பிரிய மாட்டான் ஆகையால், அதற்கும் பயணச்சீட்டு வாங்கி யிருந்தார்கள்.

மூவரும் ஜின்காவுடன் குதூகலமாகப் புறப்பட்டு அதிகாலையில் சங்ககிரியை அடைந்தார்கள். அங்கே அதிக நேரம் நீலகிரி எக்ஸ்பிரஸ் நிற்காதாகையால் வேகமாகச் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ரயிலைவிட்டு இறங்கி னார்கள்.

பாட்டி வீட்டிலிருந்து ஒரு வேலையாள் ரயிலடிக்கு வந்து அவர்களைச் சந்தித்தான். மாட்டு வண்டியில் பாட்டி வீட்டுக்குச் சென்றது மூவருக்கும் புதிய அனுபவமாக இருந்தது.

“பெட்ரோல் இல்லை. டயர் இல்லை - கியர் இல்லை - எத்தனை செலவு மிச்சம்” என்று பாட்டுப் பாடத் தொடங்கினான் சுந்தரம்.

அதைக் கவனியாமல், “சுந்தரம் அங்கே பார் - எவ்வளவு பெரிய மலை - அதுதான் சங்ககிரியா?” என்று கூவினாள் கண்ணகி.

அது வரையிலும் அவர்கள் அந்த மலையைக் கவனிக்கவே இல்லை. மூவரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

7