பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பெரிய சங்கு போல இந்த மலை காட்சி அளிக்கிறது. அதனால்தான் இதற்குச் சங்ககிரி என்று பெயர் வந்ததோ?” என்று ஆலோசனையோடு கேட்டான் தங்கமணி.

“சரி, சரி வந்தவுடன் உனது ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாயா? உன்னுடைய ஜின்காவைக் கேட்டுப்பார். குரங்குக்குத்தான் மலையெல்லாம் தெரியும்” என்று சுந்தரம் கேலி செய்தான்.

“நீங்கள் இந்த ஊருக்கு இதுதான் முதல் தடவை வருகிறீர்களா? என்று வேலைக்காரன் வண்டியை ஓட்டிக் கொண்டே கேட்டான்.

“ஆமாம். உனக்கு இந்த மலைக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டதன் காரணம் தெரியுமா?” என்று தங்கமணி அவனைக் கேட்டான்.

“எனக்கும் தெரியாது. நான் புதிதாக வேலைக்கு வந்திருக்கிறேன்” என்றான் வண்டிக்காரன்.

மெதுவாக வண்டி பாட்டி வீட்டை அடைந்தது. பாட்டி வாசலிலேயே நின்று இவர்களை அன்புடன் வரவேற்றாள்.

[3]

பாட்டியின் வரவேற்பு!

அவர்கள் எதிர் பார்த்தது போல் பாட்டி தள்ளாத கிழவியாய் இருக்கவில்லை. விவசாயத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டு உழைத்ததால் அவள் உடம்பு நல்ல வலிமையோடு இருந்தது. தலைமட்டும் நரைத்திருந்தது. வாயிலே பல் இல்லை. இருந்தாலும் அவள் ஆரோக்கியமாக இருந்தாள்.

9