அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
28
யும் பாராட்டி, இவ்வாறு வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளியோனாய அவன் தொழிலாகிய உழவினையும், அத்தொழிற்குத் துணைபுரியும் அவன் ஏறுகளையும், ஏற்றங்களையும் புலவரும், இரவலரும் போற்றி வாழ்த்தக் கடமைப்பட்டவராவர்; அவ்வாறு வாழ்த்தா தார் செய்ந்நன்றி கொன்ற பாவிகளாவார்; அவ்வாறு யானும் பாடேனாயின், என்னைப் புரக்கும் பாண்டியன், என்னையும், என் சுற்றத்தினையும் புரக்காது கைவிடுவானாக என்றும் கூறி அவளை வாழ்த்துவாராயினர்; இவ்வாறு வாழ்த்திய வாழ்த்துரையில் புலவர்களைக் குறிப்பிடுங்கால், அவர்கள் நுண்ணிய நூற்பொருள் அறிந்த அறிவே கையாகவும், அறிந்த பொருளை அறிய உணர்த்தும் நாவே மருப்பாகவும், அந் நாவினின்றும் வெளிப்போந்து மாற்றாரை வெல்லும் சொல்லே யானையாகவும் உடையவராவர் என்று கூறும் திறம் மள்ளர் புலவர்கள்பால் கொண்டுள்ள மட்டிலாப் பெருமதிப்பினை உணரச் செய்கிறது; “புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் பலம் மிக்கவர்க்கன்றோ புலனாம்?”
“இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
சிறுகுடி கிழாஅன் பண்ணன் பொருந்தித்
தன்னிலை அறியுந னாக, அந்நிலை
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை கொடைமேங் தோன்றல்;
நுண்ணூல் தடக்கையின், நாமருப் பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணன்; கேட்டிவன்...........
வினைப்பகடு, ஏற்றம் எழீஇக் கிணைதொடா
நாள்தொறும் பாடே னாயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி
கண்மா றலியர் என் பெருங்கிளைப் புரவே.”
(புறம்: ௩௮௮ )
தலைமகள் ஒருத்தி, தன் தோழியும் அறியாவண்ணம் தலைமகன் ஒருவனோடு உறவுகொண்டாள்: அன்று முதல்