பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



95

என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்று உரை எழுதியுள்ளார். இவ்வாறு இவர் நாகத்திற்கு இரு பொருள் கூறியது எதனால்?

பிங்கல நிகண்டு[1] ஒரு சொல்லுக்குப் பல்பொருள் கூற வந்தவிடத்து “நாகமென் கிளவி . . . . புன்னையும் . . ஆகும்” என்று கூறுகின்றது. சூடாமணி நிகண்டு[2], “புன்னை, புன்னாகம், நாகம், வழை, சுரபுன்னைப்பேரே” எனச் சுரபுன்னையை ‘வழை’ எனவும், ‘நாக’மெனவும், ‘புன்னை’ எனவும் குறிப்பிடுகின்றது. ஆகவே, எந்நிலம் மருங்கின் பூவையுங் கூறும் கபிலர், குறிஞ்சிப் பாட்டில் ‘கொங்கு முதிர்நறுவழை’ என்று கூறிப் புன்னையைக் ‘கடியிரும் புன்னை’ எனக் குறிப்பிட்டமையானும், ‘வழை’ என்பதற்குச் சுரபுன்னை எனத் தாம் உரை வகுத்து விட்டமையானும், ‘நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி’ (குறிஞ். 94) என்றவிடத்தில் ‘நாகம்’ என்பது சுரபுன்னையைக் குறித்தலாகாதெனக் கொண்டு ‘நாகப்பூ’ என்று உரை கண்டு விட்டு, இதற்கு விளக்கங் கூறும் முகத்தான் மலைபடுகடாத்தில் வரும் நாகமென்பதற்குப் ‘புன்னை’ என்று உரை கண்டார் போலும்; இருப்பினும் குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடுகடாத்தில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும் உரை கூறுவதால், இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களோ என ஐயுறுதல் வேண்டாம். மாறாக இதனை வலியுறுத்துமாப் போல, ‘உருகெழு உத்தி உருகெழு நாகம்’ (பரிபா. 12 : 4) என்ற அடியில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் பரிமேலழகர் ‘நாகமரம்’ என்று உரை கூறுவாராயினர். சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘நாவல் மரம்’ ‘நாக மரம்’ அன்று என்பதும், இங்கு உணர்தற்பாற்று. ஆகவே, புன்னை என்பதற்கு நாகமென்ற பெயரும் உண்டெனக் கோடல் அமையும்..

‘புன்னை’ என்பது ஒரு சிறு மரம். நெய்தல் நிலத்து மரமாகப் பெரிதும் பேசப்படுகின்றது. அகநானூற்றில், பத்துப் பத்தான எண்ணிக்கையில் அமைந்த 40 நெய்தல் திணைப்பாக்களில் பெரும்பாலானவற்றிலும், பிறவற்றிலும் ‘புன்னை’ குறிக்கப்பட்டுள்ளது. இது நெய்தல் திணைக்குரிய ‘ஞாழலோடு’ இணைத்துப் பாடப் பெற்றுள்ளது.

“. . . . . . . . . . . . . . . . . . புன்னையொடு
 ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்”
-ஐங். 103 : 1-2


  1. பிங்கல நிகண்டு : 3717
  2. சூடாமணி நிகண்டு : 4. ம. பெ. தொகுதி 4