பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

119

இலவ மலரின் செம்மை நிறத்தைப் பரணர், சான்றோரின் நாவிற்குவமிக்கிறார். சான்றோர் பாடியதைக் குறிக்கின்றவர், அச்சான்றோரது நாவின் நிறத்தையும், நேர்மையையும் அம் செந்நா என்று கூறுகின்றார். இச்சொற்றொடரில் உள்ள செம்மை நேர்மையுடன், நாவின் நிறத்தையும் குறிக்குமாறு கண்டு மகிழலாம்.

“இலமலர் அன்ன அஞ்செந் நாவில்
 புலமிக் கூறும் புரையோர்”
-அகநா. 142 : 1-2

முள்ளிலவின் பசிய காய் மஞ்சள் நிறமாக முதிரும். முதிர்ந்து வெடித்து வெள்ளிய பஞ்சினை வெளிப்படுத்தும். இலவம் பஞ்சிற்குப் ‘பூளை’ என்றும் பெயர்.[1] இதன் காய் வெடிக்கும் போது அதன் முதுகுப்புறத்தில் தோன்றும் கோடு அணிலின் புறத்தில் தோன்றும் கோடுகளை ஒத்திருக்குமென்பர்.

“பூளையம் பசுங்காய் புடைவிரித் தன்ன
 வரிப்புற அணில்”
-பெரும். 84-85

இலவ மரத்திற்கு ஆங்கிலத்தில் சில்க் காட்டன் மரம் (Silk cotton tree) என்று பெயர். முள்ளிலவிற்கு (Red cotton tree) ரெட் காட்டன் மரம் என்றும், வெளிர் மஞ்சள் நிறமான பூக்களையுடைய இலவம் பஞ்சு மரத்திற்கு (White cotton tree) வொயிட் காட்டன் மரம் என்றும் பெயர்.

“நெருப்பெனச் சிவந்த உருப்புஅவிர் அங்காட்டு
 இலைஇல மலர்ந்த முகையில் இலவம்
 கலிகொள் ஆயம் மலிவுதொகுபு எடுத்த
 அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”

-அகநா. 11 : 2-5

“வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
 அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
 பெருவிழா விளக்கம் போல பலவுடன்
 இலையில மலர்ந்த இலவமொடு
 நிலைஉயர் பிறங்கல் மலையிறந் தோரே”

-அகநா. 185 : 9-13


இம்மலரில் ஐந்து செவ்விய அகவிதழ்கள் இருக்கும். இதழின் தடிப்பாலும், மென்மையாலும், செம்மையாலும் மகளிரது வாயிதழுக்கு இதன் இதழ் உவமிக்கப்படுகிறது.


  1. இலவம் பஞ்சின் பேர் பூளையாகும்-சேந். திவா.