பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

சங்க இலக்கியத்

“பயிலுமாதவிப் பந்தரொன்று எய்தினான்”[1]
“கோதை வீழ்ந்ததுவென முல்லை கத்திகைப்
 போது வேய்ந்தின மலர் பொழிந்து”
[2]

ஆசிரியர் நச்சினார்க்கினியர் கத்திகை என்பதற்குக் ‘குருக்கத்தி’ என்று உரை கூறுவர்.

ஆகவே குருக்கத்தி எனவும் குருகு எனவும் சங்க இலக்கியங்கள் கூறும் இக்கொடியினைப் பிற்கால இலக்கியங்கள் ‘மாதவி’ எனவும், ‘கத்திகை’ எனவும் குறிப்பிடுகின்றன. தாவர இயலில் இதற்கு ஹிப்டேஜ் மாடபிளோட்டா (Hiptage madablota) என்று பெயர். இது மால்பிகியேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை ஒரு வன்மையான கொடி எனக் கூறலாம். நெடிது நீண்டு வளரும் இயல்பிற்றாயிலும், பற்றுக் கொம்பின்றித் தானே ஓங்கி வளராது. இவ்வியல்பினால் இதனை வேறு கோல் கொண்டு பந்தரிட்டு, அதன் மேலே படர விட்டால், நல்ல பந்தராக அமைந்து வளரும். இதன் இலைகள் நான்கு அங்குலம் முதல் ஒன்பதங்குலம் வரை நீளமும், ஒன்றரை முதல் இரண்டங்குலம் வரை அகலமும், நல்ல பச்சை நிறமும் உடையன. இதன் இலை சற்றேறக் குறைய நுணா இலை போன்றிருக்கும். இதன் பூங்கொத்து காண்பதற்கு அழகாக இருக்கும். இணர், கணுக் குருத்தாகவும் நுனிக் குருத்தாகவும் வளரும். அரையங்குலம் முதல் முக்கால் அங்குலம் வரை நீளமான இதன் பூ வெண்மையானது. புறவிதழ்கள் ஐந்தும் பசுமையானவை. அரும்புகள் புறவிதழ்களால் மூடப் பெற்றிருத்தலின் பசிய நிறம் தோன்றுமாகலின், இதனைப் பைங்குருக்கத்தி என்றனர் போலும். அகவிதழ்கள் ஐந்தும் அடியில் குறுகியும், நுனியில் அகன்று நொய்தான விளிம்புகளுடனும் இருக்கும். ‘இதனைத் துய்த்தலை இதழ பைங்குருக் கத்தி’ (நற். 97 : 6) என்று புலவர் கூறுவர். இவற்றுள் ஓர் இதழ் மட்டும் மஞ்சள் நிறம் விரவப் பெற்றதாதலின், மலர் கண்கவர் வனப்புடையது. பத்து கேசரங்கள் பொன்னிறத் தாதுகுத்து நிற்கும். கருப்பை மூன்று பிரிவுகளை உடையது. இம்மலர் வட்ட வடிவாகத் தோன்றும்; பூவில் நறுமணமுண்டு. அதனால் இம்மலரைச் சூடிக் கொள்வதுண்டு. இம்மலரைப் பித்திகை மலருடன் விரவித் தொடுத்து உழவர் மடமகள் தெருவில் விற்பதைக் கூறுவர் மாறன் வழுதியார் :


  1. சீ.சிந் : 1322 : 4
  2. சீ.சிந் :1208