பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

புளிமா
அவெர்கோயா பிலிம்பி (Averrhoe bilimbi,Linn.)

“கரந்தை குளவி கடிகமழ் கலிமா” (குறிஞ் : 76) என்பது கபிலர் வாக்கு. கலிமா என்பது புளிமாவாகும். ‘கலிமா’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘தழைத்த மாம்பூ’ என்று உரை கண்டார். இவ்வுரை தேமா மரத்தைக் குறிப்பது போன்று ‘மாம்பூ’ எனப்படுதலின் பெரும்பாலோர். இது தேமா மரத்தையே குறிக்குமென்பார். இது பொருந்தாது. என்னை? கபிலர் கூறியது கூறார் ஆகலின். மேலும் ‘கலித்த மாம்பூ’ என்ற இவ்வுரை புளிமாம்பூவிற்கும் பொருந்தும் என்பதைக் கூர்ந்து நோக்கி அறிதல் கூடும்.

இவ்விடத்திலன்றி ‘புளிமா’வைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. எனினும் பிற்கால நூல்களில் அதிலும் யாப்பிலக்கணத்தில் ஈரசைச் சீர் முதல் நான்கசைச் சீர் வரையில் ‘புளிமா’ இணைத்துக் கூறப்படுகின்றது.

புளிமாமரம் தேமா மரத்தினின்றும் வேறுபட்டது. ‘புளிமா’ ஒரு சிறு மரம். தழை மிகுந்து தழைத்து வளரும். காய் மிகப் புளிப்பானது. கனியாக முதிர்வதில்லை. இம்மரம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : கலிமா
பிற்கால இலக்கியப் பெயர் : புளிமா
உலக வழக்குப் பெயர் : புளிச்சா, புளி மாங்காய், புளிச்சக்காய் மரம்,
தாவரப் பெயர் : அவெர்கோயா பிலிம்பி
(Averrhoe bilimbi,Linn.)