பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

குரவம்–குரா, குரவு, குருந்து
அடலான்ஷியா மிசியோனிஸ் (Atelantia missionis,Oliv.)

“பயினி வானி பல்லிணர்க்குரவம்” என்றார் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் (குறிஞ்: 69). குரவ மரம் தனித்தும், கோங்கு, மராஅம், மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும், சுரத்திலும், பொழில்களிலும் வளரும். இளவேனிற் காலத்தில், அரவின் பற்களையொத்த அரும்பீன்று மலரும். மலர் நறுமணமுடையது. இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர்.

சங்க இலக்கியப் பெயர் : குரவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குருந்து, குரா, குரவு
பிற்கால இலக்கியப் பெயர் : குருந்தம்
தாவரப் பெயர் : அடலான்ஷியா மிசியோனிஸ்
(Atelantia missionis,Oliv.)

குரவம்–குரா, குரவு, குருந்து இலக்கியம்

‘குரவம்’ ஒரு சிறு மரம். இதனைக் குரா, குரவு, குருந்தம், குருந்து என்றெல்லாம் கூறுவர். நிகண்டுகள் இதற்குப் புன எலுமிச்சை, கோட்டம், குடிலம், கோபிதாரம் என்ற பெயர்களைக் கூட்டுகின்றன.

இம்மரம் கோவலரின் கொல்லைக் குறும்புனத்தில் வளருமென்றும், இதன் அடிமரம் குட்டையானதென்றும், குவிந்த இணரையுடைய தென்றும், வெள்ளிய பூக்களை உடையதென்றும் இளந்தச்சனார் கூறுவர்.