பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

செருந்தி
ஆக்னா ஸ்குவரோசா (Ochna squarrosa,Linn.)

சங்க இலக்கியங்களில் செருந்தியின் அரும்பும், போதும், மலரும், இணரும் பேசப்படுகின்றன. மேலும், வேறு பல மரங்களுடன் இது வளர்வதாகக் கலித்தொகை கூறும். குறிஞ்சிப் பாட்டில் இம்மலர் இடம் பெற்றுள்ளது. ‘செருந்தி’ என்ற பெயர் ஒருவகையான புல்லையும் குறிப்பிடுவதாகச் சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சியும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன. ஆனால், இவை செருந்தியின் மலரைக் கூறவில்லை. ஆகவே, செருந்தி என்பது ஒரு சிறு மரமெனக் கொண்டு, இவ்விளக்கம் தரப்படுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : செருந்தி
தாவரப் பெயர் : ஆக்னா ஸ்குவரோசா
(Ochna squarrosa,Linn.)

செருந்தி இலக்கியம்

“களிறுமாய் செருந்தி“-மது. கா: 172

என்ற இச்சொற்றொடருக்கு நச்சினார்க்கினியர் ‘யானை நின்றால் மறையும் வாட்கோரை’ என்றும், செருந்தி-நெட்டிக் கோரையுமாம் என்றும் உரை கண்டுள்ளார்.

“இருஞ்சாய் அன்ன செருந்தியோடு வேழம்
 கரும்பின் அலமரும் கழனி ஊரன்“
-ஐங்: 13 : 1-2

என்று ஓரம்போகியார் கூறுவர். ‘சாய்’ என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். ‘சாய்’ அன்ன செருந்தியொடு வேழம் அலமரும் என்கிறார். இவற்றைக் கொண்டு பார்த்தால் ‘செருந்தி’ என்பது ஒருவகையான கோரை என்று எண்ண இடமுண்டு.

“செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்“-குறிஞ்: 75