பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

சங்க இலக்கியத்

“வேம்பின், வெறிகொள் பாசிலை நீலமொடுகுடி”
-அகநா 138 : 4-5


“வீட்டின் முகப்பிலும் வேப்பிலை செருகப்படுவதை இலக்கியங்கள் கூறு”மென்பர்.[1]

மேலும் வேப்பிலை குழந்தைகட்கு கடிப்பகையாகச் சூட்டப்படும் என்று கூறும் பெரும்பாணாற்றுப்படை.

“கோட்டினர் வேம்பின் ஓடுஇலை மிடைந்த
 படலைக் கண்ணி”
-பெரும் : 59-60

வேப்பமரம் பழையன்மாறன் என்ற பாண்டியர்க்குக் காவல் மரமாக அமைந்தது. இதனை வெட்டி வீழ்த்திக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் வென்றதைப் பரணர் பாடுகின்றார்.

“பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
 முழ்ஆரை முழுமுதல் துமியப் பண்ணி”

-பதிற். பதிகம் : 5 : 14-15


வேப்பமரம் ஊர் மன்றத்தில் வளர்க்கப்பட்டு வருவதை முன்னர்க் கூறினாம். ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் வரையிலும் வேப்ப மரம் முதிர்ந்து வளரும். மிக முதிர்ந்த இதன் அடி மரத்தில் பால் சுரக்கும். இப்பால் மிகவும் சுவையானது. நோய் அணுகாமல் உடலுக்கு உறுதி தருவது. இதனைப் பல ஆண்டுகட்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் கடலில் உள்ள மணி பல்லவத் தீவில் (நயினார்த் தீவு) யாம் அருந்தியதுண்டு.

வேப்பிலை பொதுவாக அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. முதிர்ந்த வேப்ப மரம் கட்டிடவேலைக்குப் பயன்படும். இம்மரத்தைக் கரையான் (Termites) உண்பதில்லை. வேப்பிலையை இந்நாளில் மாரியம்மன் பச்சிலை என வழங்குவர்.

வேம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே(Disciflorae)
 

  1. கோவை இளஞ்சேரனார்-இலக்கியம் ஒரு பூக்காடு-பக் : 338