பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

183

மரம் பூத்த பொழுதில் அதில் உண்டாகும் நறுமணத்தைப் போலவே புளிமா மரத்தின் பூவும் நறுமணமுடையதாகும்.

இச்சிறு மரத்தின் இலைகள் 2-5 இணையுடைய சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். நுனி வளரும் பூந்துனர்கள் அடி மரத்தில் உண்டாகும். மலர்கள் ஐந்தடுக்கானவை. இதன் காய்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. 4-6 செ. மீ. நீளமும், 2.5-4 செ. மீ. பருமனும் உள்ள சதைப்பற்றானவை. 4-5 பட்டையாக இருக்கும். நல்ல புளிப்புள்ளவை. தமிழ் நாட்டில் தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றது. இதைப் போன்று மற்றொரு சிற்றின மரமும் தமிழ் நாட்டில் வளர்கிறது. அதற்கு அவர்கோயா காரம்போலா (Averrhoa carambola) என்று பெயர்.

இவ்விரு சிறு மரங்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்று தெரியவில்லை என்பர் தாவரவியலார். புளிமாவின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என மாத்தியூ (1958) என்பாரும், காரம்போலாவிற்கு 2n=24 என, கிருஷ்ணசாமி, இராமன் (1949) என்பாரும் கணிப்பர்.

மாம்பூ கொத்துக் கொத்தாகக் கணுக் குருத்தாகவும், நுனிக் குருத்தாகவும் அரும்பிப் பூக்கும். மிகச் சிறிய இப்பூவில் நான்கு அல்லது ஐந்து புறவிதழ்களும், நான்கு அல்லது ஐந்து அகவிதழ்களும் உள்ளன. ஒன்று முதல் ஐந்து தாதிழைகள் உண்டெனினும், ஒன்று அல்லது இரண்டில் மட்டும் தாது விளைந்து நிற்கும். தாதுப் பையை ஒட்டி நான்கு அல்லது ஐந்து தேன் சுரப்பிகள் இருத்தலின், மலர்களில் வண்டினம் சூழ்ந்து முரலும். இதனை,

“காமர் மாஅத்துத் தாதலர் பூவின்
 வண்டு வீழ்பு அயருங் கானல்”
-குறுந். 306 : 4-5

என்று கூறுவர். பூவின் கரு ஓர் சூலறையினது. பெரிதும் பிற மகரந்தச் சேர்க்கையினால்தான் கருமுதிர்ந்து காயாகும். மாமரத்தில் ஒரு வகையான பால் (Latex) உண்டாகும். மாவடுவில் இப்பால் மிகுதியாகப் பிலிற்றும். இரும்பினாலாய அரிவாள் கொண்டு மாவடுவை நேராகப் பிளந்து, சிறிது நேரங்கழித்துப் பார்த்தால், மாவடுவின் விதைப் பகுதி முழுவதும் கறுத்தும், சதைப்பகுதி வெண்ணிறமாகவும், கண் விழியை ஒத்து மிக அழகாகவும் காணப்படும். இதனை வண்ணமும், வடிவுங்கருதி மகளிர் கண்ணுக்கு உவமிப்பர்.