பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

185

“இளமாங்காய்ப் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம்
 களமாக்கொண்டு ஆண்டாய் ஓர்கள்வியை அல்லையோ”

-கலித். 108 : 28-29

“மாவடு வகிரன்ன கண்ணி பங்கா”[1]

என வருவன காண்க.

இரும்புக் கருவிகளைக் கொண்டு மாவடுவை அரியும் போது வடுவில் உள்ள பாலில் காணப்படும் காலிக் அமிலம் ( Gallic acid), ‘ஸ்டீரிக் அமிலம்’ (Stearic acid) என்ற அமிலங்கள் இரும்பில் பட்டவுடன் ஒருவகை ‘மைப்’ பொருளாகி விடும். இதனைப் பிரான்சு நாட்டு வேதி நூலறிஞர் கண்டு, பல சோதனைகளைச் செய்துள்ளார். மாவடுவின் தோலிலும் இதே பால் இருத்தலின், அப்பகுதியும் கறுப்பாகி. கண்ணுக்கு எழுதிய அஞ்சனம் போலத் தோன்றும்.

ஆல்பர்ட் ஹில் (Albert F. Hill) என்பார், தேமாவைப் பின் வருமாறு கூறுகின்றார். “வெப்பம் மிக்க நாடுகளில் தொன்று தொட்டுப் பயிரிடப் படுகின்ற பழந்தரு மரங்களில் மாமரம் தலையாயது. ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இம்மரம் பயிர் செய்யப்படுகின்றது. இது இந்திய நாட்டின் புனிதமான மரமாகும்.” தென்னாசியக் கண்டத்தில் தோன்றிய இம்மரம் இப்பொழுது மலேசியா, பர்மா, பாலினேசியா, ஆப்பிரிக்கா, (வெம்மை மிகுந்த) அமெரிக்கா முதலிய நாடுகளில் ஏறக்குறைய ஐந்நூறு சிற்றின வகைகளாகப் பல்கிப் பயிராகின்றது. ஓர் ஆண்டிற்கு நூறாயிரம் டன் எடைக்கு மேலான மாம்பழம் உலகில் விளைகின்றது.

தேமா தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
தாவரக் குடும்பம் : அனகார்டியேசீ (Anacardiaceae)
 

  1. திருவா. 24 : 8 : 1