பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

சங்க இலக்கியத்

“புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
 மூக்கிற் கரியார் உடைத்து”
-திருக்குறள். 28 : 7

குன்றிமணியின் பெரும்பகுதி நல்ல செந்நிறமும், ஒரு புறத்தில் சிறிது கறுப்பு நிறமும் உடையதாக இருப்பதை உவமித்துரைக்கிறார். குன்றிமணியின் செந்நிறம் போன்ற செம்மை நலத்தைத் தோற்றத்தில் பெற்றாரும், அதன் மூக்கில் கருமை இருப்பது போல அகங்கருத்திருப்பர் என்று எச்சரித்துள்ளார். சங்கவிலக்கியத்தில், குன்றிக்கொடி, ‘கண்ணி’ என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1959-60ஆம் ஆண்டுகளில் எம்.எஸ்ஸி பட்டத்திற்கு, குன்றியில் யாம் ஓர் ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஆய்வுரை முழுவதும் வெளியிடப்படவில்லை. குன்றிமணிக் கொடி, அவரை இனத்தைச் சேர்ந்தது. மங்கலமான செந்நிறமுள்ள மலர்கள் நுனிவளர் பூந்துணரில் உண்டாகும். மலர்கள் கருவுற்று, நீண்ட பசிய தட்டையான காய்களைத் தரும். காய்கள் கொத்தாக இருக்கும். இக்காய்களில் விளைந்த விதைகள் வெண்ணிறமாக இருக்கும். முதிர்ந்த இதன் விதையில் காணப்படும் கறுப்புப் பகுதி மட்டும், இதன் காயில் சிவப்பாக இருக்கும். இதன் பெரும் பகுதி வெண்மை நிறமாக இருக்கும். விதை முதிருங்கால், இதில் உள்ள வெண்மை நிறம் சிவப்பாக மாறும். இது சிவப்புக் குன்றியின் இயல்பு.

இதுவன்றி, வெள்ளை நிறமான விதைகளையுடைய வெண்குன்றிக் கொடியும் ஒன்று உண்டு. இதில், வெண்ணிறமான குன்றிமணிகள் விளையும். இவ்விதையின் ஒரு புறத்தில் மங்கிய மஞ்சள் நிறம் சிறிது காணப்படும். இவ்விரு கொடிகளும் பெரிதும் தனித் தனியாக நமது நாட்டின் பல்வேறு சிறு காடுகளில் நன்கு வளர்கின்றன. இவ்வெள்ளைக் குன்றியைக் காட்டிலும் பளபளப்பான மாசற்ற மிக வெள்ளிய குன்றிமணியை உடைய செடியும், கறுப்பு நிறமான விதைகளையுடைய கருங்குன்றிச் செடியும் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சிறு புறவுகளில் வளர்கின்றன. இவையனைத்தும் தாவரவியலில் ஏப்ரஸ் பிரிகடோரியஸ் என்றே தொன்று தொட்டு வழங்கப்படுகின்றன.

எமது ஆய்வுக்குச் செங்குன்றியும், வெண்குன்றியும் தனித் தனியாகவே வளர்க்கப்பட்டன. இவை இரண்டும் பல்லாற்றானும் வேறுபட்டிருந்தமையின், இவற்றுள் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆய்ந்து கணிக்க நேர்ந்தது. அவையாவன: