பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

சங்க இலக்கியத்

கருவிளை–செருவிளை இலக்கியம்

கபிலர் தமது குறிஞ்சிப்பாட்டில் அமைத்த பூப்பந்தலில்,

“எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை”-குறிஞ் 68

என்று இவ்விரு மலர்களையுங் குறிப்பிடுகின்றார். இவற்றுள் ‘செருவிளை’ என்பது வெண்காக்கணம்; ‘கருவிளை’ என்பது கருங்காக்கணம். இரண்டும் சிறு கொடிகள். சங்க இலக்கியங்களில் கருவிளை மலர் மிகுத்துப் பேசப்படுகின்றது. செருவிளை மலரைக் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காண முடிகின்றது. செருவிளை என்பதற்கு ‘வெண்காக் கணம் பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப் பூங்கருவிளை என்பதற்கு ‘நீலமணி போலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்பர். இப்பூ மிக அழகானது.

“மணிகண் டன்ன மாநிறக் கருவிளை
 ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணிய”
-நற். 221 : 1-2

“தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர்
 ஆடுமயில் பீலியின் வாடையொடு துயல்வர”
-நற். 262 : 1-2

என்ற விடங்களில் பின்னத்தூரார் கருவிளை என்பதற்குக் கருங் காக்கணம் என்று உரை கூறுவர். ‘செருவிளை’ என்பதை வெண் காக்கணம்.என்ற நச்சினார்க்கினியர் ‘கருவிளை’ என்பதைக் கருங் காக்கணம் என்று கூறாமல் ‘கருவிளம் பூ’ என்று குறிப்பிட்டது சற்று மயக்கந் தருவதாக உள்ளது. பொதுவாக, யாப்பிலக்கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக் குறிப்பதாகக் கொள்ளுவதோடு, கருவிளாவாகிய விளாவையுங் குறிக்கும் என்பர். ‘விளம்பழங்கமழும்’ (நற். 12 : 1) என்பது கருவிளங்கனியாமாறுங் காண்க.

கருவிளை என்னுங்கொடி, தண்ணிய புதல்தொறும் மலர்ந்து அழகு செய்யுமென்பதையும், கண் போன்ற கரிய மலர்களை உடைய கருங்காக்கணக் கொடி வாடைக் காற்று வீசுதலின் கூத்தாடுகின்ற மயிலின் பீலி போன்று ஆடா நிற்கும் என்பதையும் முன்னர்க் கண்டோம். மேலும், கருவிளாவின் மலர் கண் போன்றதன்று. ‘கருவிளா’ என்பது மரம்; கருவிளங்கனி, கூவிளங்கனி போன்றது. (இதன் விரிவைக் ‘கூவிளம்–கருவிளம்’ என்ற தலைப்பில் காணலாம்) அன்றியும்,

“காதலர் பிரிந்த கையறு மகளிர்
 நீர்வார் கண்ணின் கருவிளை மலர”
-அகநா. 294 : 4-5