பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

சங்க இலக்கியத்

என்னுமாறு, கருங்காக்கணம்பூ பெரிதும் நீர்ப்பசை உடையதாகவும் காதலனைப் பிரிந்த மகளிரின் கண் போன்று நீரைச் சொரிந்து கொண்டு இருக்கும் என மிக நன்றாக உவமித்தார் கீரன் எயிற்றியனார். மேலும்,

“கண்ணெனக் கருவிளை மலர”-ஐங். 464
“கருவிளை கண்போன் மாமலர்”-நற். 262
“கருவிளை கண்போற் பூத்தன”[1]

என்பன காண்க.

கருவிளைக்கு மாறுபட்ட நிறங்கொண்ட வெண்மைப் பூ வெண்காக்கணம் எனப்பட்டது. ‘செரு’ என்றால் ‘மாறுபாடு’ என்று பொருள். கருமைக்கு மாறுபட்ட வெண்மை நிறமான ‘காக்கணம்’ செருவிளை எனப்பட்டது. புட்பவிதி நூலார் இவற்றை

“கருமுகைக் கருங்காக் கொன்றை
 முருகாரும் வெண்காக் கொன்றை”
[2]

என்றனர். ஆண்டாள் கருவிளையைக் கார்க்கோடப்பூ என்று அழைக்கின்றாள்.

தாவரவியலில் இக்கொடிகள் பாப்பிலியோனேட்டே (Papilionatae) என்ற தாவரத் துணைக் குடும்பத்தைச் சார்ந்தவை ஆகும். இத்துணைக் குடும்பத்தில் பத்துப் பிரிவுகள் (டிரைப்-Tribe) உள்ளன இவற்றுள் எட்டாவது பிரிவில் 5 துணைப்பிரிவுகள் காணப்படும். நான்காம் துணைப் பிரிவு யூபேசியோலியே (Eபphaeseoleae) எனப் படும். இதில் 6 பேரினங்கள் பேசப்படும். இவற்றுள் முதலாவது கிளைடோரியா (Clitoria) என்பது. இப்பேரினத்தில் 27 சிற்றினங்கள் உள்ளன என்பர். இவற்றுள் ஒன்று கருவிளை. இதனைக் கிளைடோரியா டர்னாட்டியா (Clitoria turnatea, L.) என்றழைப்பர். இம்மலரின் நிறம் கருநீலம்.

கருவிளை—செருவிளை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)

  1. கார் : 9
  2. புட்பவிதி : 3