பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சங்க இலக்கியத்

“மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
 முருக்குதாழ்பு எழிலிய நெருப்புஉறழ் அடைகரை”

-பதிற். 23 : 19-20


பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு வியத்தகு செய்தி கூறுகின்றார். யானையைப் போன்றதொரு துறுகல் கிடந்தது. அதன் மேல் சிவந்த மலர் விரிந்த முருக்க மரக் கிளைகள் படிந்திருந்தன. கடுங்காற்று வீசியதால் செம்மலர்கள் அசைந்தாடின. அக்கல் அழல்பொழி யானையின், ‘ஐ’ என்னும்படி வியப்பைத் தந்தது.

“நனைமுதிர் முருக்கின் சினைசேர் பொங்கர்
 காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு
 அழல்பொழி யானையின் ‘ஐ’எனத் தோன்றும்”

-அகநா. 223 : 5-7


மிக உயர்ந்த மரக் கிளையில் உண்டான இம்மலரின் செம்மைக்கு நெருப்பை அன்றி, அரக்கையும் உவமையாக்குவர்:

“சிதர்நனை முருக்கின் சேண்ஓங்கு நெடுஞ்சினை
 ததர்பிணி அவிழ்ந்த தோற்றம் போல
 உள்அரக்கு எரிந்த உருக்குறு போர்வை”

(சிதர்-சிந்தல், ததர்-கொத்து)-சிறுபா. 254-256

“அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்”-குறிஞ். 96

இம்மலரின் செவ்விய இதழ்களுக்குப் பவளத்தை உவமை கூறுவாரும் உளர். குளத்து நீரில் இதன் சிவந்த இதழ் உதிர்ந்தது. இதனை ‘மணி போன்ற கண்ணாடிக்குள்ளே பவளத்தை எறிந்ததைப் போன்ற’தென்பர், கணிமேதாவியார்.

“மணிபுரை வயங்கலுள் துப்புஎறிந்தவை போல
 பிணிவிடு முருக்கிதழ் அணியகத்து உதிர்ந்துஉக”

-கலி. 33 : 3-4


முருக்க மலரின் பசிய புறவிதழ் முதிர்ந்து மஞ்சள் நிறமாகி, அதன் உள்ளுறையும் செவ்விய அகவிதழை மூடிக் கொண்டு இருப்பதைக் கணிமேதாவியார்,

“பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம்”[1]


  1. திணை மா : 67