பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கொள்
டாலிகஸ் பைபுளோரஸ் (Dolichos biflorus,Linn.)

கொள் இலக்கியம்
மாங்குடி கிழார் என்னும் புறநானூற்றுப் புலவர், உணவுப் பொருள்களில் வரகு, தினை, கொள், அவரை என்ற இந்நான்கு அல்லதில்லை என்று பாடியுள்ளார்.

“கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
 சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு
 இந்நான் கல்லது உணாவும் இல்லை
-புறநா. 335 : 1- 3

வரகு விதைப்பதற்காகக் கரம்பையாகக் கிடந்த நிலத்தை உழுகிறார்கள். அங்கே கொள்ளுக் கொடி முளைத்திருக்கிறது என்றும், கொள்ளொடு பயறும், பாலும் சேர்த்துப் பாற்சோறு அட்டு உண்பர் என்றும் சங்க நூல்களில் அறிய முடிகிறது.

“வெள்வரகு உழுத கொள்ளுக் கரம்பை-பதிற். 75 : 11

“கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக்
 கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை

(மிதவை-பாற்சோறு)

-அகநா 37:12-13

கொள்ளுக் கொடி முதலில் செடியாக நேரே வளரும். பின்னர் கொடியாகிப் படரும். குதிரைக்குக் ‘கொள்’ நல்லுணவுப் பொருள். அதற்காகவே கொள் பயிரிடப்படுகிறது.

கொள் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : டாலிகஸ் (Dolichos)