பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

சங்க இலக்கியத்

திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும் இவ்விரு பெயர்களையும் குறிப்பிடுகின்றார்.

“வண்காது நிறைத்த பிண்டி ஒண்தளிர்
 நுண்பூண் ஆகம் திளைப்ப ”
-திருமுரு. 31-32

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . . வெவ்வரைச்
 செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்”

-திருமுரு. 206-207


மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார், பிண்டியைக் குறிப்பிடுகின்றார்.

“சினைதலை மணத்த சுரும்புபடு செந்தீ
 ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில்”

-மதுரைக். 700-701


இவற்றிற்கெல்லாம் உரை கூறிய நச்சினார்க்கினியர், திருமுரு காற்றுப்படையில் வரும் ‘பிண்டி’ என்ற ஓரிடத்தில் மட்டும் ‘பிண்டியினது’ என்றாராயினும், ஏனைய விடங்களிலெல்லாம் ‘பிண்டி’, ‘செயலை’ என்ற சொற்களுக்கு, ‘அசோகு’ என்றே உரை கூறியுள்ளார். இதனுடைய ஆங்கிலப் பெயர் அசோகா மரம் (Asoka Tree) என்பதாகும். இவற்றையறியாத இற்றை நாளைய விரிவிலா அறிவினர் எல்லாம் போலியால்தியா லாஞ்சிபோலியா என்ற நெட்டிலிங்க மரத்தை அசோகு என்று தவறாகக் கூறிப் பரப்பி வருவதோடன்றி, களஞ்சியங்களிலும் எழுதியுள்ளனர்.

‘பிண்டி’ எனப்படும் இவ்வசோக மரம் மலைப்பாங்கில் அழகு பொருந்த உயர்ந்து வளருமென்பர் கூற்றங்குமரனாரும், கபிலரும்.

“மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த
 செயலை அந்தளிர் அன்ன . . . . . .”
-நற். 244 : 6-10

“சிலம்பின் தலையது செயலை”-ஐங். 211

மேலும், புலவர் பெருமக்கள் இதன் அடிமரம் சிவப்பு நிறமுள்ளதெனவும், பல கிளைகளையுடையதெனவும், கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடுவர் எனவும், கிளைகள் செவ்விய அழகிய இளந்தளிர்களையும் செவ்விய இணர்களையும் உடையன எனவும் கூறுவர்.