பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

சங்க இலக்கியத்

தாவரவியலில் கொன்றை மரம், ‘சீசல்பினியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் 133 பேரினங்கள் உள்ளன. கொன்றை உள்ளிட்ட காசியா என்ற பேரினத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள் உலகில் உள்ளன. இவற்றுள், தமிழ் நாட்டில் 20 சிற்றினங்கள் உள்ளன என்பர் ‘காம்பிள்’ (Gamble). காசியா பிஸ்டுலா எனப்படும் சரக்கொன்றையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என டிஷ்லரும் (1922), இர்வின், டர்னர் என்போர் (1960) 2n=24, 28 எனவும், நந்தா (1962) 2n=24 எனவும், பந்துலு (1962) 2n= 28 எனவும் கூறுப.

கொன்றையின் காய் முற்றியவுடன் ஓரடி முதல் ஒன்றரையடி வரை நீண்டு, கருநிற முடையதாகவிருக்கும். விதைகள் தனித்தனி அறைகளில் முற்றுதற்கு ஏற்ப, காய் உள்ளீடு உடையதாக இருக்கும். இக்காயைப் பாணர் பறை அடித்தற்குப் பயன்படுத்தும் கோல் போன்றதென்பர்.

“புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியினர்
 ஏகல்மிசை மேதக மலரும்”
-நற். 296 : 4-5

“. . . . . . . . . . . . . . . . பாணர்
 அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம்தீங்கனி
 பறைஅறை கடிப்பின் அறைஅறையாத் துயல்வர”

-நற்.46:5ー7


கொன்றை—கடுக்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : சிசால்பினே (Caesalpineae)
தாவரப் பேரினப் பெயர் : காசியா (Cassia)
தாவரச் சிற்றினப் பெயர் : பிஸ்டுலா (fistula)
தாவர இயல்பு : சிறு மரம்
தாவர வளரியல்பு : மீசோபைட்