பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

ஈங்கை
மைமோசா ரூபிகாலிஸ் (Mimosa rubicaulis, Lamk.)

ஈங்கை இலக்கியம்
சங்க இலக்கியங்கள் இப்புதர்க் கொடியைப்

“புதல் இவர் ஈங்கை-அகநா. 294 : 6.

“ஈங்கைப் பைம்புதல்-ஐங். 456 : 3

என்று சிறப்பித்துக் கூறுகின்றன.

குளக்கரையில் பிரம்புடன் செறிந்து வளரும். இதன் தண்டில் முட்கள் இருக்கும். இதன் இலைக் கோணத்தினின்றும் இதன் பூங்கொத்து உண்டாகும். மலர் ‘துய்’தலையையுடையது என்ற தாவரவியல் உண்மைகளைப் புலவர்கள் கூறியுள்ளனர்.

“பரந்த பொய்கைப்பிரம்பொடு நீடிய
 முட்கொம்பு ஈங்கைத் துய்தலைப் புதுவீ
-அகநா. 306 : 2-3

“துண்முள் ஈங்கைச் செவ்வரும்பு-குறுந். 110 : 5

இதன் செவ்விய அரும்பு மலரும் போது நுனியில் துளை ஒன்று தோன்றும் என்பதையும் நெய்தல் தத்தனார் கூறுவர்.

“வாங்கு துளைத்துகிரின் ஈங்கை பூப்ப-அகநா. 343:2

(துகிர்-பவளம்)

இதன் அகவிதழ்கள் வெண்ணிறமானவை. மகரந்தங்கள் ‘துய்’ என்னும் பஞ்சு போன்ற தலையை நீட்டிக் கொண்டிருக்கும். இதனால் இதன் மலரை ஆலங்கட்டிக்கு உவமிப்பர் பரணர்.

“......அரும்ப முதிர் ஈங்கை
 ஆலியன்ன வால்வீதா அய்
-அகநா. 125

இக்கொடியின் தளிர் இதன் பூவைக் காட்டிலும் அழகியது. அதிலும் மாரிக் காலத்தில் எழிலுடன் தோன்றும் என்னும் அகப் பாட்டு.