பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

309

இவையன்றி நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் முதலிய தொகை நூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் மருதத் திணைப் பாக்கள் பல உள.

இவற்றுள் எல்லாம் வயலும், வயலைச் சார்ந்த நிலம் பற்றியும், இந்நிலத்தில் வாழும் மக்களைப் பற்றியும், இவர்தம் மருதத் திணையொழுக்கம் பற்றியும் புலவர்கள் பாடியுள்ளனர். மருதம் என்ற மரம் இப்புலத்தில் வளரும் அழகிய பெரு மரமாகும். காவிரி, வையையாறுகளின் கரைகளிலும், துறைகளிலும், வயல்களின் மருங்கிலும் தழைத்து வளரும் என்பர் புலவர் பெருமக்கள்.

“மருதம் சான்ற மலர்தலை விளைவயல்”-பதிற். 73 : 8

இம்மரத்தின் நிழல் சூழ்ந்த பெரிய துறைகளில் ஆடவரும், மகளிரும் நீராடுவர். நீர்நிலைக்கு அணித்தாய் இதன் கிளைகளின் மேலேறி அங்கிருந்து கரையில் உள்ளவர்கள் மருளும்படியாகத் qதுடுமெனw இருபாலாரும் நீரில் பாய்ந்து, குதித்து விளையாட்டயர்வர். இவ்வொலி உருமின் இடியோசை போன்றது என்பர்.

“மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம்
 பெருந்துறை பெண்டிரொடு ஆடும் என்ப”
-ஐங். 33 : 2-3

“விசும்புஇழி தோகைச் சீர் போன்றிசினே
 பசும்பொன் அவிர் இழைபைய நிழற்ற
 கரை சேர் மருதம் ஏறிப்
 பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே”
-ஐங். 74

“தொல்நிலை மருதத்துப் பெருந் துறை
 நின்னோடு ஆடினன் தண்புன லதுவே”
-ஐங். 75 : 2-4

“. . . . . . . . . . . . . . . . ஆயமொடு
 உயர்சினை மருதத் துறைஉறத் தாழ்ந்து
 நீர்நணிப் படிகோடு ஏறி சீர்முக,
 கரையவர் மருள திரையகம் பிதிர
 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து”

-புறநா . 243 : 5-9


ஓங்கி வளரும் மருத மர நிழலில் செந்நெல் அடித்துப் போர் போடும் களம் அமைப்பர் எனவும், ஆண்டுறையுந் தெய்வங்கள் அக்களத்தில் பலி பெறுமெனவும், பழைய மரமாதலின் அதில் பாம்பு உறையும் எனவும் கூறுப.