பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

சங்க இலக்கியத்


“அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரை
 துறையணி மருதமொடு இகல்கொள ஓங்கி
 கலிதளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து”
-அகநா. 97 : 18-20

இனி, மருதமரத்தின் இருவேறு வகையான செம்மருதும், வெண்மருதும் கூறப்பட்டுள்ளமை காண்க.

“முடக் காஞ்சிச் செம்மருதின்”-பொருந. 189

“நெடு வெண்மருதொடு வஞ்சி சாஅய”-அகநா. 226 : 9

மேலும் மருத மரத்தின் மலர் செந்நிறமானது என்றும், துய்யினை உடையதென்றும், மலர்கள் தொங்குகின்ற துணரில் விரியுமென்றும், அத்துணர் புள்ளினம் இரிய உதிருமென்றும் கூறுவர்.

“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
 பழனப் பலபுள் இரியக் கழனி
 வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”
-நற். 350 : 1-3

“உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு இருக்கும்”-ஐங். 7
(உளைப்பூ-விரிந்த பூ)

“ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
 செவ்வீ மருதின் செம்மலோடு தா அய்த்
 துறையணிந்தன்று. . . .. . . .. . . . ”
-குறுந். 50 : 1-3
(செம்மல் -பழம்பூ)

மருதின் பூவில் புறவிதழ் கரிய நிறமானதென்றும், மேலே துய்யினை உடையதென்றும், இதன் பூங்கொத்துக்களைக் கொண்டையிலே அணிவர் என்றும், துய்யினை உடைய மருத மலரை மார்பில் அப்பிக் கொண்டால், அது சந்தனக் குழம்பைப் பூசுவதை ஒத்திருக்குமென்றும் நக்கீரர் கூறுவர்.

“துவா முடித்த துகளறு முச்சிப்
 பெருந்தண் சண்பகஞ் செறீஇக் கருந்தகட்டு
 உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
 . . . . . . . . . . . . . . . .
 நறுங்குறடு உறிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
 தேங்கமழ் மருதிணர் கடுப்ப”
-திருமுரு. 27-34