பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சங்க இலக்கியத்

நெடுந்தகையின் விழுப்புண் காக்கம்!’ என்பாளாயினள்.

(புறநா: 281)

கூத்து இலக்கணத்தில் பதினொரு வகை அகக்கூத்து உண்டு. அவற்றுள் ‘அல்லிக்கூத்து’ என்பதும் ஒன்று. அல்லிப் பெயர், நாடகத் தமிழிலும் காணப்படும். மேலும், ஆம்பல் என்னுஞ் சொல்லே பேரெண்ணையும் குறிக்கும். எட்டு விந்தங் கொண்டது ஓர் ஆம்பல்; அதாவது 1028672 ஆண்டுகள். இதன் விரிவை நெய்தல் மலர் பற்றிய தலைப்பில் காணலாம். ஆம்பல் என்பதைப் பிற்காலத்தில் குமுதம் என்றும் அழைத்தனர். அதனால், குமுதம் பேரெண்ணையும் குறிக்கும் சொல்லாயிற்று.

ஆம்பற் கொடி கடற்பரப்பிற்கு மூவாயிரம் அடி உயரத்திற்குள்ளான நன்னீர் நிரம்பிய குளங்குட்டைகளில் வளரும். இதன் கிழங்கிலிருந்து தோன்றும் இதன் இலை, நீர்ப்பரப்பிற்கு மேல் வந்து மிதக்கும். முட்டை அல்லது வட்ட வடிவினதாகிய இவ்விலையின் அடியில் நீண்ட பிளவு ஒன்றுண்டு. இப்பிளவு இலை விளிம்பிலிருந்து இலைக்காம்பு வரை நீண்டிருக்கும். இலையின் நடுவில் இதன் இலைக்காம்பு இணைந்திருக்கும். இக்காம்பு மிக நீளமானது. நீரளவிற்கு நீண்டு கொடுக்கும் இயல்பு (Elongation) இக்காம்பிற்கு உண்டு. குளங்குட்டைகளில் திடீரென நீர் நிரம்பி விடுமாயின், இவ்வியல்பினால் இலைக்காம்பு ஓரிரு நாள்களில் நீண்டு கொடுத்து இலையை நீர்ப்பரப்பின் மேல் நிலைக்கச் செய்யும். இவ்வியல்பு இதன் பூக்காம்பிற்கும் உண்டு. இலையின் கணுக் குருத்து வளர்ந்து பூவாகுமெனினும், இலைக்காம்பிற்கும், பூக்காம்பிற்கும் உள்ளமைப்பில் ஒரே ஒரு வேறுபாடு காணப்படும். இலைக்காம்பில் இரண்டு பெரிய துளைகள் நடுவில் இருக்கின்றன. பூக்காம்பில் ஐந்து பெருந்துளைகள் நடுவில் அமைந்துள்ளன. இத்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக் கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.

“அயிரை பரந்த அம்தண் பழனத்து
 ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள் கால்
 ஆம்பல் குறுநர்...”
-குறுந் 178 : 1-3

“பொய்கைபூத்த புழைக் காலாம்பல்”-ஐங். 34 : 2

“புழற்கால் ஆம்பல் அகல் அடை”-புறநா. 266 : 3

என்பனவற்றால் தமிழர் ஆம்பலின் இலைக்காம்பிலும், பூக்காம்பிலும் உள்ள தூம்புதனை அறிந்திருந்தனர் என்பது புலனாகும்.