பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

325


‘இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து’ என்றார் நக்கீரர் (திருமு. 10) ‘திணிநிலைக் கடம்பு’ என்றார் கபிலர். இம்மரம் பொய்கைக் கரையில் வளரும்.

“நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
 துறுநீர்க் கடம்பின் துணையார் கோதை”
-சிறுபா. 69-70

கடம்பின் பூங்கொத்து நீளமானது. மரக் கிளைகளிலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கும். தூங்கிணர்க் கொன்றையைப் போன்றது. பூங்கொத்தில் இளஞ்சிவப்பு மலர்கள் உண்டாகும். மலர், தேர்ச்சக்கரம் போன்றது. மலரின் நடுவில் வெண்மையான துளையுண்டு. பூங்கொத்து தொங்கிக் கொண்டிருப்பதால், முதிய மலர்கள் இணரின் மேற்பகுதியிலும், மொட்டுகள் அடிப்பகுதியிலும் காணப்படும். பூத்து முதிர்ந்த மலர்கள் பூங்கொத்திலிருந்து கழன்று உதிரும். இப்பூங்கொத்து மலர்ந்த நிலையில், பூக்களைக் கட்டிய மாலை போன்று தோன்றும். இதனையே கடம்பின் ‘துணையார் கோதை’ என்றார். இதற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர் ‘கோதை போலப் பூத்தலின் கோதை யென்றார்’ என்பர். இந்தச் சிறுபாணாற்று அடியினைச் சீவக சிந்தாமணிப் பாடலுரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். அப்பாடல்,

“கடம்பு சூடிய கன்னி மாலைபோல்
 தொடர்ந்து கைவிடாத் தோழிமா ரோடும்
[1]

(கடம்பு-ஒரு வகை மரம். சூடிய-பூத்த, கன்னி மாலை-புதுமையை உடைய பூ மாலை, கைவிடா-நீங்காத)

கடம்பு பூத்த புதுமையை உடைய பூ மாலை போல் தொடர்பு நீங்காத தோழியர் என்றார். மேலும், தலைவன் தம்மை நோக்கி நெருங்கி வருவதைக் கண்ட தலைவியும், தோழியும் ஒருவரை ஒருவர் கை கோத்து நின்ற நிலையைக் ‘கடம்பின் திரண்ட முதலை நெருங்கச் சூழ்ந்த மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலை போல’ என்னும் கபிலரின் வாக்கினை, ‘திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய துணையமை மாலையின் கைபிணி விடோம்’ (குறிஞ்.176-177) மேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். இதற்கு அவர்,

‘திண்ணிய நிலையினை உடைய கடம்பினது திரண்ட முதலை நெருங்கச் சூழ்ந்த மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதல் உடைய


  1. சீ. சிந். 990