பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/376

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

சங்க இலக்கியத்

“ஆலமும் தொல்வலி மராஅமும்”-கலி. 101 : 13

“மள்ளர் அன்ன மரவம்”-ஐங். 400 : 1

“இருள்படப் பொதுளிய. பராரை மராஅத்து”-திருமு. 11

“கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து ”
-அகநா. 83 : 5

“சொரிபுறம் உரிஞிய நெறிஅயல் மராஅத்து”
-அகநா. 121 : 8

“வாங்குசினை மலிந்த திரள்அரை மராஅத்து”
-அகநா. 221 : 7


இதன் பூ வெண்ணிறமானது. கொத்தாகப் பூப்பது. கண்ணாம்பு போன்ற வெண்ணிறமானது. இதன் வெண்மை ஒளியைக் கதிரவன் ஒளியோடு பொருத்தினர் கல்லாடனார். நீர் வேட்கை கொண்ட யானை, மலைப் பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை, வெள்ளிய மழைத்துளி விழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஓடி அலைந்தது என்பர்.

“செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு”
-திருமு. 202

“வெயில்அவிர் புரையும் வீததை மராஅத்து”
-அகநா. 317 : 5

“கேளாய் எல்ல தோழி வாலிய
 சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்”
-அகநா. 211 : 1-2

“கரைபாய் வெண்திரை கடுப்ப பலவுடன்
 நிரைகால் ஒற்றலின் கல்சேர்பு உதிரும்
 வரைசேர் மராஅத்து ஊழ்மலர் பெயல்செத்து
 உயங்கல் யானை நீர்நசைக்கு அலமர”
-அகநா. 199 : 1-4

தெய்வங்களின் நிறத்தோடு மலர்களை அறிமுகம் செய்யும் கலித்தொகை, ஒரு காதணி கொண்டவனும், வெள்ளை நிறத்தவனும், வலிய நாஞ்சில் படையைக் கொண்டவனுமாகிய பலராமன், பசிய துளசி மாலையை அணிந்திருப்பது போன்று, மராமரத்தின் அகன்ற உயர்ந்த கிளைகளில் பசிய மயில்கள் சூழ்ந்திருக்கும் என்று கூறும்.

“ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்”
-கலி. 26 : 1