பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

சங்க இலக்கியத்


இம்மரம் மலைப்பகுதியிலும், சுரத்திலும் வளரும். இது பூத்துக் குலுங்கும் போது மலையே அழகு பெற்று விளங்கும்.

“சிலம்பணி கொண்ட வலம்சுரி மராஅத்து
 வேனில் அம்கிளை கமழும்”
-குறுந். 22 : 3-4

ஒருத்தி இம்மலரைச் சூடிக் கொண்டு, அவளது கூந்தல் முழுவதும் மணங்கமழத் துவள விட்டு, மருங்கில் நடந்து சென்றாளாம்.

“. . . .. . . .. . . . அவிழ்இணர்த்
 தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
 துளங்கு இயல் அசைவர”
-நற். 20 : 2-4

இம்மரம் பாலை நிலத்து நெறியிலும், நெறியயலிலும் வளரும். உடன் போக்கு மேற்கொண்டவர் இதன் இலை உதிர்ந்த நிழலில் தங்குவர். இலை இல்லாத மராமரத்தின் நிழல், அம்மரத்தின் மேலே வலையைக் கட்டி வைத்தாலொத்து இருக்கும். வழி நடப்போர் அந்த நிழலில் தங்கிக் கானத்து எவ்வம் போக இளைப்பாறிச் செல்வர்.

“பாலை நின்ற பாலை நெடுவழிச்
 சுரன்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ”
-சிறுபா. 11-12

“புல்இலை மராஅத்த அகன்சேண் அத்தம்”
-அகநா. 3 : 11

“களிறு வழங்குஅதர கானத்து அல்கி
 இலை இல் மராஅத்த எவ்வம் தாங்கி
 வலைவலந் தன்ன மென்னிழல் மருங்கில்”

-பொருந. 49-51


ஒரு யானை வேனிற் காலத்தில், சுரத்திடையே வளர்ந்திருந்த மராமரத்தின் பட்டையைப் பிளந்து, தன் பெண் யானைக்கு ஊட்டும் என்பர் மதுரைத் தத்தங்கண்ணனார்.

“. . . . . . . . . . . . . . . .யானைதன்
 கொல்மருப்பு ஒடியக் குத்திச் சினம்சிறந்து
 இன்னா வேனில் இன்துணை ஆர
 முனிசினை மராஅத்துப் பொளிபிளந்து ஊட்ட
 புலம்பு வீற்றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்”
-அகநா. 335
(பொளி-பட்டை)