பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சுள்ளி
ஆன்தோசெபாலஸ் இன்டிகஸ்
(Anthocephalus indicus, Rich.)

“எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம்

என்றார் கபிலர் (குறிஞ். 66). இவ்வடியில் உள்ள சுள்ளி என்பதற்கு ‘மராமரப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர்.

சுள்ளி’ என்ற சொல்லைக் குறிஞ்சிப் பாட்டிலன்றி, சங்க நூல்களில் யாண்டும் காண்கிலம்.

மராமரம்’ என்பது ‘மராஅம்’ எனவும், இது கடம்ப மரத்தைக் குறிக்கும் எனவும் நச்சினார்க்கினியர் கருதுகின்றார்.

‘மராமலர்த்தார்’ (பரி. 15 : 20) என்பதற்குப் பரிமேலழகர் ‘வெண்கடம்பு’ மலர்த்தார் என்று உரை கூறுவர்.

நிகண்டுகள்[1]சுள்ளி’ என்பதற்கு மராம் என்ற பெயரையும் கூறுகின்றன. சேந்தன் திவாகரம்[2] ‘மராவெண்கடம்பின் பெயராகும்மே’ என்றமையின் இப்பொருள் வலியுறும்.

ஆகவே சுள்ளி, மராமரம், மராஅம் ஆகிய இவையனைத்தும் ஒன்றே என்று கருத இடமுண்டு. இதன் விரிவை ‘மராஅம்’ என்ற தலைப்பில் காணலாம்.


  1. நிகண்டுகள்
  2. சேந்தன் திவாகரம் : மரப்பெயர்