பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பிடவம்
ரண்டியா மலபாரிகா (Randia malabarica, Lam.)

‘பிடவம்’ என்பது ஒரு வலிய புதர்ச்செடி. இதன் புறத்தில் முட்கள் நிறைந்திருக்கும்: கார்காலத்தில் இதன் மலர்கள் கொத்தாகப் பூக்கும். பூங்கொத்து நிலவைப் போன்று வட்டமாகத் தோன்றும். மலரின் நறுமணம், கானமெல்லாம் கமழும்.

சங்க இலக்கியப் பெயர் : பிடவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : பிடா, பிடவு
உலக வழக்குப் பெயர் : புதவு, புடன்
தாவரப் பெயர் : ரண்டியா மலபாரிகா
(Randia malabarica, Lam.)

பிடவம் இலக்கியம்

கபிலர் குறிஞ்சிப் பாட்டில் ‘குல்லைபிடவம் சிறுமாரோடம்’ (குறிஞ். 78) என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது பிடா, பிடவு எனவும் பெயர் பெறும். தொல்காப்பியர் உயிர் மயங்கு இயலில் இதனைப் ‘பிடா’ என்று குறிப்பிடுகின்றார்.

“யாமரக்கிளவியும் பிடாவும் தளாவும்
 ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே

-தொல். எழுத்து. 7 : 27

சங்க இலக்கியங்கள் இதனைப் ‘பிடவம்’ என்று கூறுகின்றன. இது ஒரு புதர்ச்செடி.இதனைக் ‘குறும்புதல்’ எனவும் ‘முடக்கால் பிடவு’ எனவும் கூறுவர்.

“குறும்புதற் பிடவின் நெடுக்கால் அலரி-அகநா. 154 : 5