பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

சங்க இலக்கியத்


இதன் அடிமரம் கதிரவன் வெம்மையில் உலர்ந்து போய் இருந்தது என்றும், கார்காலத்தில் மழை பெய்யத் தொடங்கியதும் தளிர் விட்டு அரும்பீன்றது என்றும், இப்புதர்ச் செடியின் புறத்தில் முட்கள் நிறைந்திருக்கும் என்றும் கலித்தொகை கூறுகிறது.

“தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பீன்று
 முளிமுதற் பொதுளிய முப்புறப் பிடவமும்”
-கலி. 101 : 1-2

தொல்காப்பியத்தில் பிடவம், யாமரத்தோடும், தளவங் கொடியுடனும் இணைத்துப் பேசப்படுகின்றது. பிடவின் குறும் புதரின் படர்ந்த தளவின் கொடியுடன், இது கார்காலத்தில் பூக்கும் வண்டு வாயவிழ்க்க மாலையில் பூக்கும்.

இதன் வெண்ணிற மலர்கள் கொத்தாகப் பூக்கும். இப்பூங்கொத்து நிலவைப் போல, வட்ட வடிவாகத் தோன்றும். தொடுத்த கண்ணி போலவும் காணப்படும். மலர் நறுமணம் உடையது.

இதனுடைய மணம், கானம் எல்லாம் கமழும். இதன் அரும்பு கூரியது. மகளிரின் பற்களைப் போன்றது.

“பிடவம் மலரத் தளவம் நனையக்
 கார்கவின் கொண்ட கானம் ”
-ஐங். 499 : 1-2

“வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம்
 மாலை அந்திமால் அதர் நண்ணிய”
-நற். 238 : 3-4

“வான்பிசிர்க் கருவியின் பிடவு முகைதகைய
 கான்பிசிர் கற்ப கார் தொடங்கின்றே”
-ஐங். 461

“கண்ணகன் இருவிசும்பில் கதழ்பெயல் கலந்துஏற்ற
 தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும்”

கலி. 102 : 1-2
“. . . . . . . . . . . . மாலைக்
 குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
 வண்டு வாய்திறக்கும் தண்டா நாற்றம்”

அகநா. 183 : 10-12
“. . . . . . . . . . . . நிலவு எனத்
 தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின்
 வைஏர்வால் எயிற்று ஒண்ணுதல் மகளிர்”
-அகநா. 344 : 2-4

“கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
 சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி”

(எருக்கி-வெட்டி) -முல்லைப்பா. 24-25