பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

25

எனினும் ‘சூடுதரு புதுப்பூ’ என்பதற்கு ‘வயலில் மள்ளர் அறுக்கும் நெற் கதிரோடு அறுபட்டு அரிசூட்டோடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொழுது மலர்ந்த புதிய பூ’ என்று உரை கூறுவர் பின்னத்தூரார். ஆகவே, ‘சூடு’ என்பது பொதுவாக ‘நெல் அரியை’க் குறிப்பிடும் பெயர்ச் சொல் ஆயினும், ‘சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்’ (மது. கா. 512) என்ற மாங்குடி மருதனாரின் அடிக்கு, நச்சினார்க்கினியர், ‘சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளங்கும் பணிகளாகப் பண்ணும் தட்டாரும்’ என்று உரை கூறியுள்ளார். ஆதலின் ‘சூடுறு’ என்புழி ‘சூடு’ என்ற சொல்லுக்குச் ‘சுடுதல்’ என்ற பொருளும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றமை பெற்றாம். அதனால் மருதன் இளநாகனாரின் நற்றிணைப் பாடலில் வரும் ‘சூடுதரு புதுப்பூ’ என்பதற்கு ‘வெப்பத்தைத் தரும் பதிய பூ’ என்று பொருள் கோடல் ஒக்கும். அங்ஙனமாயின் அரும்புகள் போதாகி மலருங்கால் சிறிது வெப்பம் உண்டாகும் என்னும் தாவரவியல் உண்மையைச் சங்கச் சான்றோர் அறிந்திருந்தனர் என்பது வலியுறும்.

ஆம்பல் மலர் சுற்றுவட்டமாக அகல விரிந்து மலரும். இதன் முகை கொக்கின் அலகு போன்று கூம்பியது என்றும் இதன் மலர்ச்சி விடிவெள்ளி போன்று ஒளி தருவது என்றும் ஆலங்குடி வங்கனார் கூறுவர்.


“... .... .... .... கொக்கின் கூம்பு முகை
 கணைக்கால் ஆம்பல் அமிழ்து நாறுதண்போது
 குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்கெடவிரியும்”

-நற். 230:2-4

மேலும் இவ்வெள்ளாம்பல் மதி நோக்கி மலரும் இயல்பிற்று எனப் புலவர் கூறுவர்:

“மதிநோக்கி மலர்வீத்த ஆம்பல் வான்மலர்”-கலி. 72:6

இனி ஆம்பலைப் பல்லாற்றானும் ஒத்த செவ்வல்லியாகிய அரக்காம்பலைப் பற்றிச் சிறிது சிந்திப்பாம்.