பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

செம்மல்—சாதிமுல்லை
ஜாஸ்மினம் அஃபிசினேல்
(Jasminum officinale,Linn.)

செம்மல் என்னும் மலர் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே ‘சேடல் செம்மல்’ (குறிஞ். 82) எனக் கூறப்படுகிறது. இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘செம்மல் - சாதிப்பூ’ என்றார். இது முல்லை இனத்தைச் சார்ந்தது. சாதி முல்லை என்றும், சாதிப்பூ என்றும் உலக வழக்கில் உள்ளது. ஆகவே, செம்மல் என்பது சாதி முல்லை என்று தெளியலாம். சாதி முல்லைக் கொடியை ஆய்ந்து இதன் தாவரப்பெயர் Jasminum officinale, Linn. என்று அறுதியிட்டு, கோவை தாவர ஆய்வியல் மையத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதுவும் முல்லையைப் போல ஏறுகொடியே. எனினும் முல்லைக் கொடியினின்றும் வேறுபட்டது. முல்லையின் இலைகள் தனியிலைகள். செம்மலின் இலைகள் கூட்டிலைகள். மேலும், இது முல்லையைக் காட்டிலும் மிகுதியாகக் கிளைத்துப் படரும் இயல்பிற்று. இதன் மலரும் முல்லை மலரைப் போலவே வெண்ணிறமுடையதாயினும், அரும்புகள் சற்று நீண்டும் மெல்லியனவாகவும் இருக்கும். முல்லையைக் காட்டிலும் மிக்க மணமுள்ளது. எனினும் முல்லைக்கொடி பூப்பது போல அத்துணை மிகுதியான மலர்கள் உண்டாவதில்லை.

செம்மல்-சாதிமுல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச்சிற்றினப்பெயர் : அஃபிசினேல் ( officinale, Linn.)