பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/477

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

461

“கல்இவர் இற்றி புல்லுவன ஏறிக்
 குளவி மேய்ந்த மந்தி துணையொடு
 வரை மிசை உகளும் நாட”
-ஐங். 279 : 1-3

இது புதராக வளரும். அதிலும், இலைகள் அடர்ந்து, செறிந்த புதராக முள்ளம்பன்றி பதுங்கி இருக்கும் அளவிற்குச் செறிந்த புதராக இருக்கும் என்பர் புலவர்கள்.

“வேட்டம் போகிய குறவன் காட்ட
 குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர
 முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட”
-அகநா. 182 : 6-8

இதன் இலை மல்லிகை இனத்திலேயே மிகப் பெரியதாகும். இதனை,

“பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
 காந்தள் அம்சிலம்பில்”
-குறுந். 100 : 2-3

என்றார் கபிலர். இதன் இலைகள் அடர்ந்திருக்கும் என்றும், அதனால் குளவிப் பொதும்பர் குளிர்ச்சியாக இருக்குமென்றும் கூறப்படுகின்றது.

“அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்”-புறநா. 90-2
“இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பர்”-ஐந்.எ. 3 : 1

இதன் மலர் நறுமணமுள்ளது என்பதைப் பல பாக்கள் குறிப்பிடுகின்றன.

“நாறிதழ்க் குளவி”-புறநா. 380 : 7
“கமழுங்குளவி”-பதிற். 12 : 10
“குளவி நாறு நறுநுதல்”-குறுந் . 59 : 3

இவற்றைக் காட்டிலும், இதன் நறுமணத்தைச் சிறப்பாகக் கூறும் பாடல் ஒன்றுண்டு. களிறும் புலியும் போரிட்டன. குருதி வழிந்தோடி, அந்நிலம் செங்களம் ஆயிற்று. குருதியால் புலால் நாறியது. இப்புலால் நாற்றத்தை மாற்றும் அளவிற்கு இதில் மணமுண்டு என்பதைப் பேரிசாத்தனார் புலப்படுத்துகின்றார்:

“அறியாய் வாழிதோழி பொறி வரிப்
 பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த