பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/527

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

எருக்கு
கலோடிராப்பிஸ் ஜைஜான்டியா
(Calotropis gigantea,R. Br.)

நல்லவும் தீயவும் அல்லவாய் உள்ள எருக்க மலரைத் தரும் புதர்ச் செடிக்குச் சங்க இலக்கியங்களில், புறநானூற்றில் கபிலர் இடந்தருகின்றார். இதில் மலர் நிறத்திற்கேற்ப வெள்ளெருக்கொன்றும், யாங்கணும் வளரும் வெளிர் நீல எருக்கம் ஒன்றும் உண்டு. வெள்ளெருக்க மலரைச் சடையில் சூடியவர் சிவபெருமான் என்பர் கம்பர்.[1]

சங்க இலக்கியப் பெயர் : எருக்கு
தாவரப் பெயர் : கலோடிராப்பிஸ் ஜைஜான்டியா
(Calotropis gigantea,R. Br.)

எருக்கு இலக்கியம்

கபிலர் புறநானூற்றில் எருக்கம் புதர்ச் செடிக்கு ஓர் இடம் வைத்துள்ளார். பூக்களில் நல்லனவும் உள்ளன. தீயனவும் உள்ளன. புல்லிய இலை (கெடுமணத்தால்) உடைய எருக்கம் பூவையும் கடவுளர் ஏற்றுப் போற்றுவது போன்று, பாரி வள்ளல் தன்னிடம் வரும் அறிவற்ற எளியவரையும் வரவேற்றுப் பரிசளிப்பதைக் கடமையாகக் கொண்டவன் என்பதைப் பாடுகின்றார்.

“நல்லவும் தீயவும் அல்ல; குவியிணர்ப்
 புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
 கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
 மடவர் மெல்லியர் செல்லினும்
 கடவன் பாரி கைவண் மையே
-புறநா. 106


  1. “வெள்ளெருக்கஞ் சடைமுடியான்”
    -கம்பராமா. உயுத்த காண்டம்