பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

513

மணமற்றதாயினும், இதன் எழிலான தோற்றம் கருதிப் பூ கிடைக்காத இடங்களில் இதனையும் சூடி ஆடுவர் பாலை நில வழியில் கூத்தர் என்கிறார் அதியன் விண்ணத்தனார்.

“குவியிணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
 ஆடுஉச் சென்னி தகைப்ப”
-அகநா. 301 : 11-12

எருக்கம் பூவை, மடலேறும தலைமகன் கண்ணியாகச் சூடிக் கொள்வான்.

“மாஎன மடலும் ஊர்ப்பூ எனக்
 குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப”
-குறுந். 17 : 1-2

இச்செடியில் உண்டாகும் பால் கொடியது. ஆனால், மருந்துக்குப் பயன்படுவது. வெள்ளெருக்கின் நாரை எடுத்துக் குழந்தைகட்குக் கடிப்பகையாகக் கட்டுவர்.

எருக்கு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
அகவிதழ்கள் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : ஆஸ்கிளிப்பியடேசி (Asclepiadaceae)
தாவரப் பேரினப் பெயர் : கலோடிராப்பிஸ் (Calotropis)
தாவரச் சிற்றினப் பெயர் : ஜைஜான்டியா (gigantea)
தாவர இயல்பு : புதர்ச் செடி. பாழ்பட்ட வெற்றிடங்களில் வளர்வது. வெள்ளிய மலரின் நிறத்தைக கொண்டு வெள்ளெருக்கும், வெளிர் நீல மலரின் நிறத்தினால் யாண்டும் வளரும் மற்றொரு எருக்கஞ் செடியும் உள்ளன.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர்; கலப்பு மஞ்சரியாகவும் வளர்வதுண்டு. கிளை நுனியில் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.
 

73-33