பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

எண்–எள்
செசேமம் இன்டிகம் (Sesamum indicum,Linn.)

மலைபடுகடாத்திலும், இலக்கண நூல்களிலும், ‘எள்’, ‘எண்’ எனக் கூறப்படும். எள்ளுச் செடியில் உண்டாகும் விதைக்கு ‘எள்’ என்று பெயர். இதில் ‘நெய்’ சேமிக்கப்பட்டிருக்கும். எள்ளின் நெய்தான் எண்ணெய் எனப்பட்டது.

சங்க இலக்கியப் பெயர் : எண்
உலக வழக்குப் பெயர் : எள், எள்ளுச்செடி
தாவரப் பெயர் : செசேமம் இன்டிகம்
(Sesamum indicum,Linn.)

எண்–எள் இலக்கியம்

பெருங்கௌசிகனார் எள்ளை, ‘எண்’ என்று குறிப்பிடுகின்றார். ‘எள்’ ஒரு சிறு வித்தாகும். நெய்ப் பிடிப்புள்ளது. எள்ளின் நெய்தான் எண்ணெய் எனப்பட்டது. மிகச் சிறிய அளவைக் குறிக்கும் போது - எள்துணை - எட்டுணை என்று கூறுவர். திருவள்ளுவர், எள்ளின் பிளவைச் சிறிய அளவாக்கிக் கூறுவர்[1]. இஃது ஒரு சிறிய செடியாகும். இச்செடியில் விழும் நோய்க்கு ‘மகுளி’ என்று பெயர் கூறுகிறார் கௌசிகனார். ‘மகுளி பாயாது’ என்பதற்கு ‘அரக்குப் பாயாமல்’ என்று உரை கூறுவார் நச்சினார்க்கினியர். எள்ளின் செடி பலவாகக் கிளைத்து வளரும் என்றும், இதன் இளங்காயைக் ‘கவ்வை-கௌவை’ என்றும், ஒரு கைப்பிடிக்கு ஏழு காய்கள் விளையுமென்றும், இளங்காய்கள் முற்றியவுடன் நெய்யை உள்ளே கொண்டு கருநிறமாக மாறுமென்றும், கொல்லையின் பக்கத்தில் எள்ளை விளைவிப்பர் என்றும் அவர் கூறுகின்றார்.


  1. “எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்” -திருக்குறள். 889 : 1