பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ii

 இத்தாவரங்களைப் பற்றிச் சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் உண்மைகள் இந்நாளைய தாவரவியல் நூல்களின் கருத்துக்களுக்கு எந்த அளவில் ஒத்தும், உறழ்ந்தும், சிறந்தும் விளங்குகின்றன என்பதைச் சற்று நீடு நினைந்து, அவை தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன. தாவரவியலார் கூறும் பேருண்மைகளைப் புலவர் பெருமக்கள் அந்நாளிலேயே கூறியுள்ள அருமந்த சிறப்பினை முருங்கை, ஆம்பல், நெல் முதலியவற்றை விளக்கும். தலைப்புகளிலும், தாவரவியலார் இது காறும் கண்டு சொல்லாத நுண்ணியதோர் சிறப்பியல்பினை நெருஞ்சியிலும் கண்டு மகிழலாம்.

ஒவ்வொரு தாவரத்திற்கும் தாவரவியல் அடிப்படையில் தாவர இயல் வகை, தாவரத் தொகுதி, தாவரக் குடும்பப் பெயர், தாவரப் பேரினப் பெயர், தாவரச் சிற்றினப் பெயர், சங்க இலக்கியப் பெயர், சங்க இலக்கியத்தில் வேறு பெயர், ஆங்கிலப் பெயர், உலக வழக்குப் பெயர், தாவர இயல்பு முதலியனவும், இத்தாவரத்தின் தண்டு, இலை, இணர், மலர், மலர்ப் பகுதிகளான புல்லி, அல்லி, மகரந்த, சூலக வட்டங்கள், கனி, விதை, கரு, முளை முதலியவற்றின் அக, புற இயல்புகளும், இத்தாவரத்தில் இது காறும் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளைப் பற்றிய குறிப்புகளும், இவற்றின் ‘குரோமோசோம்’ எண்ணிக்கையை எவரெவர் எவ்வெப்போது கண்டறிந்து கூறியுள்ளனர் என்ற குறிப்புகளும், இத்தாவரங்களின் தோற்றம், தொடர்பு, பல்வேறு பயன் பற்றிய செய்திகளும் தாவர அறிவியல் முறைப்படி ஆங்காங்குத் தனித் தனியாக எழுதப்பட்டுள்ளன.

ஆகவே, ஒவ்வொரு தாவரத்திற்கும் முதற்கண் அதன தன் சங்க இலக்கியப் பெயரும், தாவர இரட்டைப் பெயரும், தமிழிலும்,. ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. அடுத்து, பெரும்பாலான தாவரங்களின் விளக்கவுரையின் சுருக்க வரைவு எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் தாவரத்தின் இலக்கிய விளக்கமும், அதற்கடுத்து அதனுடைய தாவர அறிவியல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் கையாளப்பட்டுள்ள அனைத்துலகத் தாவர வகைப் பாட்டியல் முறை தமிழில் தரப்பட்டுள்ளது.

மேலும், சங்க இலக்கியத் தாவரங்களின் 210 பெயர்களும் 150 மரஞ்செடி, கொடிகளைக் குறிக்கின்றமையின், இந்நூலில் 150 விளக்க உரைக் கட்டுரைகளே எழுதப்பட்டுள்ளன.