பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/601

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



585

இம்மூன்று செய்யுள்களின் மூலம், இப்புதர்ச் செடியைப் பற்றி யாம் அறியுமாறு: முசுண்டைக் கொடியும், இதனிற் படரும். அதனால், இது நல்ல நிழல் தரும்; இதனடியில் பலர் சேர்ந்து துயிலுதற்கும் உதவும்; இதன் இலைகள் சிறியன; ஒரு வகையான நறுமணம் தருவன; இலைகளை ஆடும், முயலும் தின்பதுண்டு; ஆடு மேய்ந்தொழிந்த இவ்விலைகளை எளியோர் வரகரிசிச் சோற்றுடன் தின்பதுண்டு. இக்குறிப்புகளைத் தவிர வேறு யாதும் இச்செடியைப் பற்றி அறிய முடியவில்லை. குறிஞ்சிப் பாட்டில் முஞ்ஞை கூறப்படவில்லை.

இக்காலத்தில் இதனை முன்னை என்று கூறுவர். இதனைப் பசுமுன்னை என்பதும் உண்டு. இதன் இலைகளை முன்னைக் கீரை என்று கூறுப. இது உணவாகக் கொள்ளப்படும்.

இதனைத் தாவரவியலில் பிரெம்னா லாட்டிபோலியா (Premna latifolia) என்றழைப்பர். பிரெம்னா என்ற இப்பேரினத்தில், 12 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன என்பர். இது வர்பினேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவர்.

“முன்றிலாடு முஞ்ஞை மூதிலை கறிக்கும்”

என்ற அடியினைப் பேராசிரியர், தொல்காப்பியச் செய்யுள் நூற்பாவில் (31) மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

முன்னையிலைகளைப் பசும்பாலில் அரைத்து, அமாவாசை நாள்களில் உட்கொண்டால், உடம்பின் மேல் உள்ள பலவகையான சரும நோய்களும் தீரும் என்பர்.

முஞ்ஞை—முன்னை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே. அகவிதழ்கள் ஐந்தும் இணைந்து, மேலே இரு உதடுகள் இருக்கும்.