பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/613

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

597


“. . . . . . . . . . . . வடுவாழ் மார்பின்
 அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
 தும்பை சூடாது மலைந்த மாட்சி”
-பதிற். ப. 42 : 4-6

மற்று, தழைத்த தும்பை சூடி வென்றாரைப் பாடும் புலவர் ஒருவரைத் ‘தும்பைப் புலவர்’ என்றார் ஐயூர் மூலங்கிழார்.

“ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
 பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே”
-புறநா. 21 : 10-11

மேலும் தும்பைப் பூவைக் கொத்தோடு ஆடவரும், மகளிரும் அணிவதும் உண்டென்பதை முறையே புறநானூற்றிலும் (96 : 1) ஐங்குறுநூற்றிலும் (127 : 2) காணலாம்.

தும்பை மலர் மருந்தாகவும் பயன்படும். இதன் மலர்களை நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து, முழுக ஒரு பக்கத் தலைவலி குணமாகும் என்பர்.

தும்பை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
லாமியேலீஸ்
அகவிதழ்கள் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : லேபியேட்டே (Labiatae)
தாவரப் பேரினப் பெயர் : லியூகஸ் (Leucas)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆஸ்பெரா (aspera)
சங்க இலக்கியப் பெயர் : தும்பை
தாவர இயல்பு : 3000 அடி உயரம் வரை வறண்ட வெற்றிடங்களில் 1-3 அடி உயரம் வரையில் வளரும் செடி. செடியில் நுண்மயிர் இருக்கும்.