பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/638

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

622

சங்க இலக்கியத்

‘நாடகாலத்தே மாலை கட்டினாற் போல இடையறாமல் தொடுத்த நறிய பூக்களை உடைய சிறிய கொம்புகளையும் குறிய தாளினையும் உடைய காஞ்சி மரத்தின் கொம்பரிலே ஏறி’, இதனால் காஞ்சி மரத்தின் இயல்புகளை அறிதல் கூடும்.

இதன் அழகிய மலரைக் கொத்தாகவே மகளிர் சூடுவர். ‘வீழ்இணர்க்காஞ்சி’ என்றபடி, வீழ்ந்தாலும் கொத்தாகவே விழும். ‘விளையாட்டு மகளிர் பலரும் தளிரும், தாதும், பூவுங் கோடலால் சிதைவு பட்டுக் கிடந்த காஞ்சி’ என்ற வண்ணம் இதனைப் பயன் கொள்வர்.

காஞ்சி மலரில் தாது மிகவும் உண்டாகும். இது பொற் சுண்ணம் போன்றது. குயில் குடைந்து நீராடுவது போன்று, தன் உடலில் இத்தாதுவைப் படிய வைத்துக் கொள்ளுமாம். இப்பூந்தாது படிந்திருந்த மணல் மேடு, மணங்கமழ்ந்து திருமண மேடை போன்று இருந்ததாம். காஞ்சிப் பூங்கொத்தும், தாதுவும் குவிந்து கிடந்த ஒரு எரு மன்றத்தில் குரவை அயர்வர் என்பர் புலவர்.

“விரிகாஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும்”
-கலி. 34 : 8
“தண்கயம் நண்ணிய பொழில்தொறும் காஞ்சிப்
 பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்
 வதுவை நாற்றம் புதுவது கஞல”
-அகநா. 25 : 3-5

“காஞ்சித்தாது உக்க அன்னதாது எருமன்றத்துத்
 தூங்கும் குரவை”

-கலி. 108 : 60


மற்று, காஞ்சிப் பெயர் கொண்ட செவி வழிப் பண் ஒன்றுண்டு. போரில் புண்பட்டவர் நலம் பெறவும், காற்றாவி அணுகாதிருக்கவும், மகளிர் ஐயவி சிதறி, இசை மணி எறிந்து, இப்பண்ணைப் பாடுவர் என்கிறார் அரிசில் கிழார்.

“ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
 இசைமணி எறிந்து காஞ்சி பாடி”

-புறநா. 281 : 4-5