பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

645

“அலங்கு சினைப் பலவே” -மலைப . 144
“அகல் இலைப்பல வின் சாரல் முன்னி” -குறு. 352
“. . . . . . . . . . . . முன்றில்
 பலவின்இருஞ் சினைக்கலை பாய்ந்து உகளினும்”
-குறு. 153 : 1-2
“அள்இலைப் பலவின் கனிகவர் கைய
 கல்லா மந்தி கடுவனோடு உகளும்”
-அகநா. 378 : 20-21
“. . . . . . . . . . . . பலவின்
 பழந்தூங்கு கொழுநிழல் ஒளிக்கும்”
-ஐங் 216 : 3-4
“. . . . . . . . . . . . எருமை
 பைங்கறி நிவந்த பலவின் நீழல்
 . . . . . . . . . . . . பாயல் கொள்ளும்”
-சிறுபா 42-46
(கறி-மிளகு)

பலா, அத்தி, ஆல் முதலிய மரங்களில் பூக்கள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. எனினும் இவற்றில் பிஞ்சுகள் உண்டாகிப் பழமாகும். இதனால், பிற்காலத்தில் இவற்றைப் பூவாமல் காய்க்கும் மரங்கள் என்று கருதினார்[1]. இவற்றில் பூ உண்டாகும். ஆயினும், காட்சிக்கரியது என்பதையும் மக்கள் உணர்ந்தனர் என்பதை ‘அத்தி பூத்தாற் போல’ என்ற பழமொழியினாலும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ‘பலாப் பூ’ என்று குறிப்பிடுதலாலும் அறியலாம். [2]

ஆல், அத்தி மரங்களின் பூக்கள் ‘குடத்து மலர்களாக’ உள்ளே பொதிந்து மறைந்திருக்கும். இவற்றின் பிஞ்சுகளே, இவற்றின் இணராகும். இதனைக் ‘கோளி’ என்று கூறுவர். பலா மரத்தின் பெண் துணரைக் கோளி என்று கூறலாம். ஏனெனில், இதன் பெண் பூக்கள் ‘தொத்தை’ எனவும், ‘பலாமுசு’ எனவுங் கூறப்படும். மிகச் சிறிய விரல் போன்ற இதன் பிஞ்சினுள்ளே காணப்படும் பலாவின் ஆண் பூக்களைக் காணுதல் மிக அரிது. பூக்களில் உண்டாகும் மகரந்தம் பெண் பூந்துணரில் பட்டு, மகரந்தச் சேர்க்கை வெற்றி பெறுமாயின், அப்பிஞ்சு பருத்துக் காயாகிப் பழுக்கும். இல்லையெனில், பலாப் பிஞ்சுகள் கருகிப் போய் உதிர்ந்து விடும். இப்பூக்களின் தாவர இயல்பைப் பின்னர்க் கூறுவாம்

 

  1. நல்வழி: 35
  2. தொல் . எழு : 227 உரை