பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/662

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

646

சங்க இலக்கியத்

பெரும்பாணாற்றுப் படையில், பலவின் பூந்துணரைக் கோளி எனவும், மலைபடுகடாத்தில் ‘காய்த்துணர்’ எனவும் கூறுவர். இதில் வரும் துணர் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘தொத்தை’ என்று உரை கூறுவர்.

“கொழுமென் சினைய கோளி யுள்ளும்
 பழமீக் கூறும் பலாஅப் போல”
-பெரும்பா. 407-408
“கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப” -மலைபடு. 12
“சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்” -ஐங். 214 : 1

பலாவின் பெண் பூக்கள்-பிஞ்சு, இதன் வேரிலும் தோன்றும், அடிமரத்திலும் தோன்றும்; கிளைகளிலும் தோன்றும்; தோன்றும் இடத்திற்கேற்ப இவை ‘வேர்ப்பலா’, ‘சூலடிப்பலா’, ‘கோட்டுப் பலா’ எனப்படும்.

“வேரல் வேலி வேர்க் கோட்பலவின்
 சாரல் நாட”
-குறுந். 18 : 1-2
“வேரும் முதலும் கோடும் ஓராங்குத்
 தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
 கீழ்தாழ்வு அன்ன வீழ்கோட்பலவின்”
-குறுந். 257 : 1-3
“தம்மில் தமது உண்டன்ன சினைதொறும்
 தீம்பழம் தூங்குழ் பலவின்”
-குறுந் . 83  : 3-4
“. . . . . . . . . . . . செவ்வேர்ச்
 சினைதொறும் தூங்கும் பயங்கெழு பலவின்”
-நற். 77 : 4-5
“செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி” -அக. 209 : 15

முதிர்ந்த பலாப்பழம் மத்தளம் போன்று பெரிதாக இருக்கும். பெரிய குடம் போலவுமிருக்கும். வணிகர் கழுதைகளின் மேல் ஏற்றிச் செல்லும் மிளகு மூட்டைகளைப் போன்றுமிருக்கும் என்பர் புலவர்கள்.

“. . . . . . . . . . . . முழவு உறழ் பலவில்” -அகநா. 172 : 11
“கானப்பலவின் முழவு மருள் பெரும்பழம்” -மலைபடு. 511
“சுரஞ் செல் கோடியர் முழவின் தூங்கி
 முரஞ்சுகொண்டு இறைஞ்சின அலங்குசினைப் பலவே”

-மலைபடு. 143-144