பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/669

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



653

வஞ்சி ஆகும்’ என்று பிங்கல நிகண்டு[1] கூறுகின்றது. இவற்றுள் வஞ்சி என்பது ஒரு புதர் என்று கொள்ளக் கிடக்கின்றது.

‘வஞ்சியில் மரமும் உண்டு, வஞ்சிக் கொடியும் உண்டு. எதன் பூவைப் புறப்பூவாகக் கொண்டனர்? இலக்கண இலக்கியங்களில் எது என்று குறிக்கப்படாததால், இது வினாவில் இடம் பெறுகின்றது’, என்கிறார் கோவை இளஞ்சேரனார்.[2]

இங்ஙனம் கூறியவர் வஞ்சியைக் கொடி என மதித்து, அதன் தாவரப் பெயர் காலமஸ் ரோடங் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தாவரப் பெயர் பிரம்பின் கொடியைத்தான் குறிக்கும். சங்கச் சான்றோரும், பழந்தமிழரும் பிரப்பங்கொடியை வஞ்சியெனக் கொண்டனரா என்பதும், முட்கள் நிறைந்த இப்பிரம்பின் மலரை வஞ்சியாகச் சூடிக் கொண்டனரா என்பதும் சிந்திக்கற்பாலன.

தவிர, மரஞ்செடி கொடிகளின் தமிழ்ப் பெயர்களையும், தாவரப் பெயர்களையும் தொகுத்துப் பட்டியலிட்ட லஷிங்டன் (1915)என்பார் (பக். 140)வஞ்சி என்பது சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா என்ற சிறு மரம் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்ஙனமே, சென்னை மாநிலத் தாவரங்களைப் பற்றிப் பெருநூல் எழுதிய காம்பிள் (1928) என்பாரும், வஞ்சி என்பது இதே தாவரம் என்று குறிப்பிடுவதுடன், இதன் மலையாளப் பெயரும் வஞ்சி என்று கூறுவாராயினர்.

ஆதலின் வஞ்சி என்பது ஒரு சிறு மரமெனவும், சங்கப் புலவர்கள் கூறுவதும் இம்மரத்தையே எனவும், பிங்கலம் கூறும் ‘புதல்’ என்பதும் ஒரு சிறு மரமாகலாம் எனவும் கொண்டு, இதன் தாவரப் பெயர் சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா எனக் கோடலே அமையும்.

இனி, போர்த் தொடர்பான அறிவிப்புகளின் போதும், விழாக் காலங்களிலும் ‘கிணை’ எனப்படும் பறை ஒன்று முழங்கப்படும். இப்பறையை அடித்துப் பாடலும் பாடப்படும். இப்பாடல் இசை வஞ்சிப் பெயர் பெற்றது.

“பனிக்கயத்து அன்ன நீள் நகர் நின்றுஎன்
 அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
 எஞ்சா மரபின் வஞ்சி பாட”
-புறநா. 378 : 7-9

இவ்விசையை மருத யாழ்த்திறத்து ஓர் ஓசையாக வகுத்தனர் இசைநூலார். மேலும், ‘வஞ்சிப்பா’ என்ற பாடல் வகையினை யாப்பிலக்கணத்தில் காணலாம்.


  1. பிங். நி. 4015
  2. இலக்கியம் ஒரு பூக்காடு. பக். 277