பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/689

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

673

“. . . .. . . .. . . . உறந்தைக் குணாஅது
 நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்”
-அகநா. 4 : 14-15

“சிலம்பு கமழ்காந்தள் நறுங்குலை” -ஐங். 293 : 1

எனினும், இது தமிழ் நாட்டில் எல்லாவிடங்களிலும் நிலப் பூவாகக் காணப்படுகிறது. இதனுடைய வேர்த்தொகுதியில் கிழங்கு இருக்கும்.இதனை ‘முழுமுதற் காந்தள்’ (குறுந். 361) என்பர். இதன் தண்டு வலியுடையதன்று. இலை அடியில் அகன்றும் வர வரக் குறுகியும், நடுநரம்புடன் பளபளப்பாகத் தோன்றும். இதன் இலையின் நுனி பற்றுக் கம்பியாகச் சுருண்டும், நீண்டுமிருத்தலின் வேறு செடிகளைப் பற்றிக் கொண்டு மேலேறிப் படரும். காயாம்பூச் செடியின் (காயா) மேலேறிக் காந்தள் படர்ந்திருந்ததைத் திருமைலாடிச் (தஞ்சை மாவட்டம்) சிறுபுறவில் யாம் கண்டதுண்டு. இதனை,

“. . . . . . . . . . . . அரவின்
 அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோல்
 காயா மென்சினை தோய நீடிப்
 பல்துடுப் பெடுத்த அலங்குகுலைக் காந்தள்”
-அகநா. 108.12-15

என வரும் அடிகளில் கண்டு ம்கிழலாம்.

காந்தளின் மொட்டு, இலையின் கணுக் குருத்தாகத் தோன்றும். நுனியில் குலையாகவும் இருப்பதுண்டு. இதனைக்

“. . . . . . . . . . . . . . . . காந்தள்
 கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் ”
-நற். 313 : 6ー7

“செழுங்குலைக் காந்தள்” -சிறுபா. 167

என்பர். இதன் அரும்பு புறத்தில் பச்சையாகவும், போதாகி முதிருங்கால் மஞ்சளாகவும் இருக்கும். பூக்காம்பு (Padicel) நுனியில் நேர்கோணமாக ஒரு பக்கம் வளைந்திருக்கும். காந்தள் முகை மூன்று முதல் நான்கு அங்குல நீளமுடையதாய், அடியில் சற்று பருத்தும், நுனி சிறுகிக் காணப்படுதலின், துடுப்பு எனப்படுகிறது.

“காந்தள் துடுப்பின் கமழ் மடல்” -மலைபடு. 366
“காந்தள் நீடிதழ் நெடுந்துடுப்பு ஒசிய” -அகநா. 78 : 8-9

எனப்படும். இத்துடுப்பு மகளிருடைய முன் கைக்கு உவமிக்கப்படும்.

 

73-43