பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/698

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

682

சங்க இலக்கியத்

என்றவதனால், ஒருத்தி காந்தள் நாறுபவளாகத் தலைவனால் குறிக்கப்பட்டாள் என்பதும் அறியலாம்.

இலக்கணத்திலும் காந்தள்

புறத்திணையில் இதன் பெயரில் ஒரு துறை அமைந்தது. இதனைத் தொல்காப்பியம்,

“நெறியறி சிறப்பின் வெல்வாய் வேலன்
 வெறியாட் டயர்ந்த காந்தளும்,”
தொல் : பொ : புறத்திணை. 62 : 1-2

எனப் பெயர் சூட்டியுளது. மேலும் மடல் ஏறுவதற்குப் பெயராகவும், இக்காந்தள் கூறப்படுகிறது. இதனை இளப்பூரணர்,

‘காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார்’ என்றாராகலான், ‘வெறியாட்டயர்ந்த காந்தள்’ என்றார். அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றாளாகிய பெண்பால் மாட்டு நிகழும் வெறி ‘காந்தள் எனவும் பெயராம்’ என்று அகத்தினை இயலில் காந்தள் பெற்ற இரண்டு இடத்தைக் குறித்துள்ளார். இரண்டில் வெறியாடும் வேலன் ‘காந்தள் சூடி ஆடுதலில் காந்தள் என்றார்’ என நச்சினார்க்கினியர் காந்தள் சூடுவதைக் குறித்தார். இது போன்று, மடலேறும் போதும் காந்தள் சூடப்படும். எனவே, இரு துறைகளுக்கும் காந்தள் ‘சின்னப்பூ’ (Emblem) ஆயிற்று.

தொல்காப்பியத்தில் ‘தெய்வம் உணாவே’ (தொல். பொருள் : 18) என்னும் நூற்பா அகத்திணைகளின் கருப்பொருள்களைக் குறிக்கும். இதன் உரையாசிரியர் குறிஞ்சி நிலப் பூவாக – வேங்கை, குறிஞ்சி, காந்தள் எனக் காந்தளையும் கூறியுள்ளனர். இது கார்காலத்தில் பூப்பது என்று கேசவனார் கூறுவர்.

“. . . . . . . . நெரிமுகைக் காந்தள்
 கார்மலிந் தன்றுநின் குன்று”
-பரி 14  : 13-17