பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/708

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

692

சங்க இலக்கியத்

“கோடல் வாங்கு குலைவான் பூப்
 பெரிய சூடிய கவர்கோல் கோவலர்”
-அகநா. 264 : 2-3
“கோடல்எதிர் முகைப் பசுவீ முல்லை
 நாறிதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
 ஐதுதொடை மாண்ட கோதை”
-குறு. 62 : 1-2
“கோடற் கண்ணி குறவர் பெருமகன்” -புறம். 157 : 7

நன்கு முதிர்ந்த இதன் மலரும், இதழ்களும் தனித்தனியாக உதிர்ந்து விழும். அவை உடைந்து போன வளையல் போன்று காட்சி தருமென்பர் புலவர்.

கலித் தொகையில் இதற்கொரு காட்சியைக் காணலாம். தலைவன் தலைவியை மணந்து கொள்ளாமல், களவொழுக்கத்தை நீடிக்கிறான். இவனது செயலைப் புறத்தார் அறியத் தலைப்படுகின்றனர். நற்றாய் வெகுண்டு கவல்கின்றாள். தாழிட்டு அடைத்தாற் போலத் தலைவி இச்செறிக்கப்படுகிறாள். அதனால், மனமுடைந்த தலைவியின் உடலும், சோர்வுற்ற மெலிகிறது. அவள் அணிந்துள்ள சங்கு வளையல்கள், நற்றாய்க்கு முன்னர் தாமே கழன்று விழுகின்றன. இந்நிலையைத் தோழி, தலைவனிடம்,

‘நின் வரையினிடத்தே மலர்ந்த வெண்கோடல் இதழ்களைப் போலத் தலைவியின் வளையல்கள் தாமே கழன்று உகுப. அவளது தோள்களின் பேரில் உமக்குச் சினமுண்டா?’ என்று கேட்பது போலத் தலைவியின் தாங்கொணாத் துயரைப் புலப்படுத்தி, அவளைக் கடிமணங் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றாள்:

“தாழ்செறி கடுங்காப்பின் தாய்முன்னர் நின்சாரல்
 ஊழுறுகோடல் போல்எல் வளைஉகுப வால்”
-கலி. 48 : 10-11

என்பர். இக்கருத்தைப் பின் வருவனவற்றுள்ளுங் காணலாம்:

“இவட்கே அலங்கிதழ்க் கோடல்வீ உகுபவைபோல்
 இலங்குஏர் எல்வளை இறை ஊரும்மே”
-கலி. 7 : 15-16
“கமழ்தண் தாது உதிர்ந்துக ஊழற்ற கோடல்வீ
 இதழ்சோரும் குலைபோல இறைநீவு வளையாட்கு”
-கலி. 121 : 13-14

ஆதலின் கோடற்பூ காந்தளின் பொது அமைப்புடையது. வெண்மை நிறமானது. நறுமணமுடையது. துடுப்பாய் முகையீன்று,