பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சூரல்–பிரம்பு
காலமஸ் ரோடங் (Calamus rotang, Linn.)

சூரல்–பிரம்பு இலக்கியம்

‘விரிமலர் ஆவிரை வேரல் சூரல்’ என்றார் கபிலர் (குறிஞ். 71). சூரல் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சூரைப்பூ’ என்று உரை கொண்டார். சூரல் என்பது சூரற்கொடி என்றும் சூரை என்றும் சூரையாவது பிரம்பு என்றும் உரை காண்பர். தாவரவியலில் இது காலமஸ் ரோடங் (Calamus rotang, Linn.) எனப்படும். காம்பிள் என்பாரும் இதனுடைய தமிழ்ப் பெயர் ‘சூரல்’ என்று குறிப்பிடுகின்றார். மலையாளத்திலும் பெரிய பிரப்பங்கொடியை ‘வலிய சூரல்’ என்றும் சிறுபிரப்பங் கொடியைச் ‘செறுசூரல்’ என்றும் கூறுவர். இதனால் சூரல் என்பது பிரம்பு என்பது வலியுறும்.

“சூரல் மிளைஇய சாரல்ஆர் ஆற்று” -அகநா. 228 : 9
“கொடுமுள் ஈங்கை சூரலொடு மிடைந்த” -அகநா. 357 : 1

என்ற இவ்விரு அகநானூற்று அடிகளில் சூரல் குறிப்பிடப்படுகின்றது. சூரற்கொடி மிக நீளமாக வளரும். ஆற்றங்கரைகளிலும், மலைச்சாரல்களிலும் பிரம்பு வளரும். இது ஈங்கையுடன் வளரும் என்றார் தாயங்கண்ணனார்.