பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

700

மலர் : ஆண் பூக்களும், பெண் பூக்களும் தனித்தனி உள்ளன.
புல்லி வட்டம் : 3 பல் விளிம்புகளை உடையது. அடியில் இணைந்திருக்கும்.
அல்லி வட்டம் : 3 இதழ்கள் பிரிந்திருக்கும். ஆண் மலரில், இவை அடியில் இணைந்திருக்கும். பெண் பூவில், இவை இணைந்திருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண் பூவில் 6 கூம்பிய தாதிழைகள். பெண் பூவில் இவை ஒரு கிண்ணம் போன்று மருவி, மேற்புறத்தில் 6 மலட்டு மகரந்தப் பைகளைக் காணலாம்.
சூலக வட்டம் : பெண் பூவில் சூலகம் 3 செல்களை உடையது. 3 சூல்கள் உள்ளன. சூல்கள் நேரே நிமிர்ந்திருக்கும்.
சூல் தண்டு : பெண் மலரில் சூல் தண்டு குட்டையானது. சூல்முடி மூன்று கிளையானது
கனி : சற்று நீண்ட உருண்டையானது. பளபளப்பான கனியுறை உண்டு. இதில் செதில்கள் அடர்ந்துள்ளன. ஒரு விதைதான் இருக்கும். கனி சற்றுப் புளிப்பானது. உண்ணப்படுவது.

பிரம்பில் இருவகை உண்டு, ஒன்று மெல்லிய, மிக நீண்ட தண்டு உடையது. இது கூடை. நாற்காலிகளுக்கு அடி பின்னுவதற்கும் (பிளெய்ட்டிங்) பலவாறாகப் பயன்படும். இதனையே மலையாளத்தில் செறுசூரல் என்பர்.

இதுவன்றி, மிகவும் தடித்த, பெரும் பிரம்பு ஒன்றுண்டு. இது புதராகத் தோன்றி வளரும். நீண்டு, கொடி போன்று வளரும். இந்தப் பிரம்பு மிக வலியது. இது பல வேறு வகையாகப் பயன் படுகிறது. இதனை காலமஸ் த்வெயிட்டிஷ் (Calamus thwaitesh var. canarana) என்றழைப்பர். இது கேரளத்தில் மலைகளில் வளர்கிறது.