பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சங்க இலக்கியத்

“தாமரை புரையும் காமர் சேவடிப்
 பவளத் தன்ன மேனித் திகழொளிக்
 குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
 நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
 சேவலங் கொடியோன் காப்ப
 ஏம வைகல் எய்தின்றால் உலகே”
-குறுந். 1

சேவடி என்றமையின் செந்தாமரையைக் குறிக்கும். குறுந்தொகைக்கு முதற் பாடலாக அமைந்த இதனுள் நானிலங்கட்கும் உரிய கருப்பொருள்கள் கூறப்படுகின்றன. அவையெல்லாம் செந்நிறமானவையாகலின், தாமரையும் செந்தாமரையாகுமெனக் கோடலும் ஒன்று.

தாமரை ஒரு கொடி; நன்னீரில் வாழும். தாமரையின் தண்டு அது வளரும் சேற்றில் புதைந்திருக்கும். அதிலிருந்து இலைகளும், மலர்களும் நீண்ட காம்புகளைக் கொண்டு நீர்ப்பரப்பின் மேலே மிதந்து வளரும். இலைக் காம்பிலும் மலர்க் காம்பிலும் முட்கள் மலிந்திருக்கும். புலவர்கள் முள் நிறைந்த தாளையுடைய தாமரை என்று பாடுவர்.

“தாழை தவளம் முட்டாள தாமரை”-குறிஞ். 80
முள் அரைத் தாமரை”-சிறுபா. 144
முட்டாட்டாமரை துஞ்சி”-திருமு. 73

மேலும், இக்காம்புகள் நுண்ணிய துளைகளை உடையவை. இவற்றுள் காற்று நிறைந்திருக்கும். அதனால், இதன் இலைகளும், மலர்களும் நீரில் மிதக்க இயலும். தாமரை மலரிதழ்களின் நிறத்தால் செந்தாமரை. வெண்டாமரை என இருவகை உள்ளன. நீலத்தாமரை வடநாட்டில் வளர்வதாகக் கூறுவர். செந்தாமரையின் அகவிதழ்கள் கருஞ்சிவப்பு நிறமாகக் கூறப்படுகின்றன.

“திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
 ஆசில் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
 சேயிதழ் பொதிந்த”
-சிறுபா. 73-75

மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
 அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவை போல்”

-கலி. 13 : 11-13

வெண்டாமரையின் இதழ் நல்ல வெண்மை நிறமானது. இதனை முயற்காதிற்கு ஒப்பிடுவர்.