பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/757

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

741

‘பெரியோர்’ இங்ஙனம் தவறான கருத்துக்களைச் சொல்லாதிருக்கப் பெறின் நன்று!

இனி, கரும்பிற்குப் பிற்காலத்தில் வேழம், கன்னல் என்ற பெயர்கள் வழங்கப்பட்டன. எனினும்,

“கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும் ” -ஐங். 12 : 1

என ஒதப்படுதலின் கரும்பும், வேழமும் வேறாதல் காணலாம். ‘கன்னல்’ என்ற சொல்லை நிகண்டுகள் கரும்புக்குச் சூட்டின. மூங்கில் போன்று கணுக்களைக் கொண்டுள்ளமையால், மூங்கிலுக்குரிய ‘கழை’ என்னும் சொல்லால், கரும்பைக் குறிக்கத் தொடங்கினர். எனினும், ‘கழைக்கரும்பு’ என்று கீரன் எயிற்றியனார் இவற்றை வேறுபடுத்திக் காட்டுவர்.

கரும்பு ஒரு புதர்ச் செடி. இதற்கு நீர் மிகுதியாக வேண்டப்படும். அதனால், நீர்ப் பிடிப்புள்ள வயல்களில் பயிரிடப்படும்.

“. . . . . . . . . . . . அகல் வயல்
 நீடுகழைக் கரும்பின்”
-அகநா. 217 : 3-4
“. . . . . . . . . . . . அகல் வயல்
 கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ”
-அகநா. 235 : 11-12

கரும்பில் பல கணுக்கள் காணப்படும். உயர்ந்து, நீண்டு வளரும் இக்கரும்பு வெள்ளிய நீண்ட கொத்தாகப் பூக்கும். இணரில் அரும்புகள் பசிய தாளால் மூடப்பட்டு இருக்கும். இது கரும்பின் நுனியில் வேல் போலச் செங்குத்தாக இருப்பதையும், சூல் கொண்ட பச்சைப் பாம்பு போலக் கூம்பி இருப்பதையும் கூறுவர் புலவர். அரும்புகள் விரியும் போது, பொதி அவிழ்ந்த பூ வெண்மையாகக் கவரி போன்று காட்சி தரும்,

“. . . . . . . . . . . . கரும்பின்
 வேல்போல் வெண்முகை விரிய”
-நற். 366  : 7-8

“சினைப் பசும்பாம்பின் சூல்முதிர்ப் பன்ன
 கனைத்த கரும்பின் கூம்பு பொதிஅவிழ”
-குறுந். 35 : 2-3

“தோடுகொள் வேலின் தோற்றம் போல
 ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்”
-புறநா. 35 : 9-10